சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் ஒப்பந்தத்தை வரவேற்கிறோம்

131 0

தற்போது நடைமுறையில் இருக்கும் ஜி.எஸ்.பி.பிளஸ் வரி சலுகை நிகழ்ச்சித் திட்டமானது இந்த வருட இறுதியில் தனது பத்தாவது ஆண்டை நிறைவு செய்கிறது.  அப்போது நாம் இது தொடர்பாக அறிக்கைகளை வெளியிடுவோம். இலங்கை தனது கடப்பாடுகளை செய்கின்றதா அல்லது இந்த சலுகையை நிறுத்த வேண்டுமா என்பது தொடர்பாக அப்போது ஆராயப்படும். என்ன நடக்கும் என்பதை இப்போது கூற முடியாது. எனவே இலங்கை இவ்வருட இறுதியில் ஜி.எஸ்.பிளஸ் சலுகைக்காக மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் சய்பி வீரகேசரிக்கு விசேட செவ்வி,

கேள்வி : இலங்கையின் கடன் திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியிருக்கின்றது. 2.9 பில்லியன் டொலர்கள் வழங்­­­கப்படவுள்ளன. இதனை ஐரோப்பிய ஒன்றியம் எவ்வாறு பார்க்கிறது?  

பதில் : சர்வதேச நாணய நிதியம்   இலங்­­கைக்­கான  கடன் உதவியை அங்கீகரித்­தமை தொடர்பில் நாம் மகிழ்ச்சியடை­கின்றோம். அது இலகுவான பணி அல்ல. இலங்கைக்கு கடன் வழங்கியவர்களுடன் கடன் மறுசீரமைப்பு செய்து­கொள்ள வேண்­டும். அதாவது நிதியியல் உத்தரவாதத்தை பெற வேண்டும்.

எனி­னும் சில நாடுகள் கடன் மறுசீரமைப்பு விடயத்­தில் தயக்­கம் காட்டின. ஆனால்  ஐரோப்­­பிய நாடுகள் முழுமையான நிதி­யியல் உத்தரவாதத்தை வழங்கின. இது தொடர்பில் நாங்கள்  சர்வதேச நாணய நிதி­யத்துடன் நெருங்கி செயற்­பட்டோம். ஆனால் ஐரோப்பிய ஒன்றியமாக நாங்­கள் ஒரு விடயத்தை உணர்கிறோம்.  அதா­வது இலங்கை போன்ற நெருக்கடி நிலைமையை எதிர்கொள்கின்ற நாடு­கள் நிச்சயமாக சர்வதேச நாணய நிதியத்­துடன் இணைந்து செயற்படவேண்டும் என்­பதையே ஐரோப்பிய ஒன்றியம் நம்பு­­கின்றது.

அதனைவிடுத்து  நாடுகள் தனிப்பட்ட கடன்களை பெற்றுக் கொள்­வது நிரந்தர தீர்வாக அமையாது. அதனால்­தான் சர்வதேச நாணய நிதியத்­தின் வேலைத்திட்டத்துக்கு ஆதரவு வழங்கினோம். ஒன்றியம் எப்போதும் இலங்கைக்கு இருதரப்பு கடன்களை வழங்கு­வதில் அக்கறை காட்டுவதில்லை.    எம்மைப் பொறுத்தவரையில் சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாகவே இந்த செயற்பாடுகள் இடம்பெற வேண்டும்.  அதனை மிகவும் நேர்மறையான நல்­லெண்­ணத்துடன் பார்க்கின்றோம். இந்த வேலைத்திட்டத்துக்கு நாம் ஆதரவு வழங்கு­கிறோம். ஆனால் இது மிகவும் கடினமானதாக இருக்கப் போகின்றது. எதிர்­காலத்தில் பல சவால்கள் இருக்கின்றன.  மறுசீரமைப்புகள் மிகவும் கடினமானதாக இருக்கும்.

ஏற்கனவே பல பாதிப்புகளை மக்கள் எதிர்கொண்டுள்ளனர். மேலும் சில கடினமான நிலைமைகள் ஏற்படலாம்.  அதிகளவு தாராளமய நிலைமை ஏற்படும். பல அரசு நிறுவனங்கள் மறுசீரமைக்­கப்படும். மானியங்கள் குறைவடையும்.

எனவே இந்த நிலைமை  மக்களை அதி­களவு பாதிக்கக்கூடாது என்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. நாம் மனிதாபி­மான  உதவி­களை வழங்குகிறோம். உரத் தைப் பெற்றுக்­கொடுப்­பதற்காக செயற்­­படுகிறோம்.  இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த உதவு­கி­­றோம். பாதிக்கப்படுகின்ற சமூகங்­களை நோக்கி எமது உதவிகளை விரிவுபடுத்து­கி­றோம். மேலும் பாதிக்கப்­பட்ட மக்களுக்கான உதவி­­களை உறுதிப்படுத்து­வதில் உலக வங்கி­யுடன் இணைந்து செயற்படுகி­றோம்.

கேள்வி : சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை­யடுத்து எதிர்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையுடன் எவ்வாறு பொருளா­தார ரீதியாக இணைந்து செயற்படும் ?  

பதில் : ஐரோப்பிய ஒன்றியத்தின் பல திட்­டங்கள் இலங்கையில் காணப்படு­கின்றன. குறிப்பாக சுற்றுலாத்துறை திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. சுகாதார சுற்­­றுலா (Wellness tourism) தொடர்பான விடயங்­­களை முன்­னெடுக்­­கின்றோம். பயிற்சி­களை வழங்குகி­றோம். தொழில் முயற்சிகளை ஊக்கு­விக்கின்றோம். இவ்வாறு  பல்வேறு விட­யங்களை இலங்கையின் பல்­வேறு பகுதிகளிலும் ஐரோப்பிய ஒன்றி­யம் செய்து கொண்டிருக்கிறது.

இவை எல்லா­வற்றை­யும் விட மிக முக்கியமானது ஐரோப்பிய ஒன்றி­யத்தின் சந்தை இலங்­­­கைக்காக திறக் ­கப்­பட்டிருக்கிறது என்ப­தாகும். வர்த்­தக தொடர்புகளை மேம்படுத்துவ­­தற்­காக இதனை திறந்­துள்­ளோம். இலங்­­கைக்கு நாம் ஒரு டொலருக்கு பெறுமதி­­யான பொருளை ஏற்று­மதி செய்யும்போது இலங்கையி­லி­ருந்து இரண்டு யூரோ பெறுமதியான பொருளை இறக்குமதி செய்­­கி­றோம். மேலும் இலங்கைக்கு ஜி.எஸ்.டி. பிளஸ் வரி சலு­­கையை வழங்கி­யிருக்­கிறோம். இதனூ­டாக பூச்சிய கட்டண அற­விடல் முறையே அமுல்படுத்­தப்படுகிறது. நேரடி நிதி வழங்­­கலுக்கு பதிலாக நாம் இவ்­­வாறான செயற்­பாடு­­களையே முன்னெ­டுக்கிறோம்.

கேள்வி : அப்படியானால் நேரடி இரு ­தரப்பு கடன்களை ஐரோப்பிய ஒன்றியம் இலங்­கைக்கு வழங்காதா..?

பதில் : ஐரோப்பிய ஒன்றியம் இருதரப்பு கடன்களை வழங்குவதில்லை. மாறாக   மானியங்களையே இலங்கைக்கு வழங்கு­கின்றது. நெருக்கடி காலத்தில் பல கடன் வழங்குநர்கள்  இலங்கைக்கான கடன் வழங்­கலை இடைநிறுத்தினர். காரணம் அது கடன்கள் என்பதாலாகும். ஆனால் நாம் மானிய உதவிகளை தொடர்ந்து வழங்கு­கி­றோம். எனவே எந்தவொரு நெருக்கடி மற்றும் வங்கு­ரோத்து நிலையிலும் எமது உதவி­கள் நிறுத்தப்படவில்லை. நாம் அதற்காக மீள எதனையும் இலங்கையிடம் எதிர்பார்ப்ப­தில்லை.

இலங்கையின் மனிதா­பிமான தேவைகளுக்கு நாங்கள் தொடர்ந்து  உதவிகளை  செய்துகொண்டு தான் இருக்கிறோம். ஆனால் இந்தியா பில்லி­­யன் கணக்கில் இலங்கைக்கு கடனை வழங்கியது. அது கடன் வசதியாகும்.     மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் இலங்­கைக்கு இந்தியா உதவியை செய்த­ததை நாம் பாராட்டுகின்றோம். ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ச்சியாக நாணய நிதியத்­தின் நிகழ்ச்சியையே ஊக்கு­­வித்துக் கொண்டி­ருந்தது. நெருக்கடி நிலை­­களை கையாள்­வதற்கு சிறந்த இடம் சர்வதேச நாணய நிதியம் என்பதை நாம் திடமாக நம்புகி­றோம்.

கேள்வி : எதிர்காலத்தில் முதலீடுகளை  ஐரோப்­பிய ஒன்றியம் இலங்கையில் முன்னெ­டுக்­குமா?

பதில் : நாம் நேரடியான முதலீடுகளை இலங்கையில் செய்யமாட்டோம். கலா­சார ஊக்குவிப்பு செயற்பாடுகளுக்கு ஊக்கு­விப்பு வழங்குவோம். நல்லிணக்க செயற்­பாடுகளுக்கு உதவுவோம். இலங்கை­யில் முதலீடுகளை நாம் செய்யவில்லை. நாம் துறைமுகங்களை கொள்வனவு செய்ய மாட்டோம். உட்கட்டமைப்பு வசதிகளை நிறுவமாட்டோம். ஆனால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு நாம் உதவுவோம். எதிர்காலத்­தில் ஐரோப்பிய ஒன்றிய முதலீட்டு வங்கி இலங்கையில் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும். அதில் சலுகைக் கடன்கள் பெற்றுக் கொடுக்­கப்­படும். முக்கியமாக பசுமை வேலைத்திட்­டங்­களுக்கு இந்த வங்கி கடன் வழங்கும்.

கேள்வி : இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் வழங்­குகிறது. தற்போது அது மீளாய்வு செய்­யப்­படுவதாக தெரிகிறது. உண்மையில் என்ன நடக்கிறது?

பதில் : ஜி.எஸ்.பி. பிளஸ்  வரி சலுகை நிகழ்ச்சித்திட்டம் 10 வருடங்களுக்கு செல்லுபடியானது.  தற்போது நடைமுறை­யில் இருக்கும் ஜி.எஸ்.பி.பிளஸ்  சலுகை நிகழ்ச்சித் திட்டமானது இந்த வருட இறுதியில் தனது பத்தாவது ஆண்டை நிறைவு செய்­கி­றது. அப்போது நாம் இது தொடர்பாக அறிக்கைகளை வெளியிடு­வோம்.

இலங்கை தனது கடப்பாடுகளை செய்கின்றதா அல்லது இந்த சலுகைகளை நிறுத்த வேண்டுமா என்பது  தொடர்பாக அப்போது ஆராயப்படும்.  என்ன நடக்கும் என்பதை  இப்போது கூற முடியாது.  எனவே இலங்கை  இவ்வருட இறுதியில் ஜி.எஸ்.பிளஸ்  சலுகைக்காக  மீண்டும் விண்­ணப்­­பிக்க வேண்டும்.  காரணம் புதிய ஜி.எஸ்.பி. பிளஸ்  சலுகை நிகழ்ச்சி திட்டத்துக்காக புதிய நிபந்தனைகள், புதிய ஏற்பாடுகள் முன்வைக்கப்படும்.

2024 ஆம் ஆண்டில் இலங்கை  மீள் விண்ணப்பிக்க வேண்டும். அதில் தற்போது இருப்ப­தை விட புதிய கடப்பாடுகள் முன்வைக்கப்­படலாம். தற்போது 27 விடயங்கள் காணப்­படுகின்றன. அவற்றுடன் ஒன்று அல்லது இரண்டு இன்னும் அதி­கரிக்கலாம்.

கேள்வி : இலங்கை தற்போது புதிய பயங்­­­கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வர்த்த­மானிப்­படுத்தி இருக்கின்றது. இது குறித்த ஐரோப்பிய  ஒன்றியத்தின் பார்வை என்ன?

பதில் : 2017 ஆம் ஆண்டு இலங்கை ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை பெறும்போது பயங்கரவாத தடை சட்டத்தை மீளாய்வு செய்வதாக வாக்குறுதி அளித்தது. நாம் சட்டத்தை நீக்குமாறு கூறவில்லை. மாறாக மீளாய்வு செய்யுமாறே கூறுகின்றோம். ஐரோப்பிய ஒன்றியத்திடமும்  பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் காணப்படுகிறது. ஆனால் எந்த ஒரு சட்ட­மும் சர்வதேச தரத்துக்கு அமைவாக இருக்கவேண்டும்.

சர்வதேச தரத்துக்கு அமைவாக எனும்போது கைது மற்றும் அது தொடர்பான ஏற்பாடுகள்இ தடுத்து வைத்தல்இ சட்டத்தரணி ஆஜரா­கும் நிலைஇ ஒப்புதல் வாக்குமூலம் போன்ற விடயங்கள் சர்வதேச தரத்துக்கு அமைவாக வரையறுக்கப்பட வேண்டும். இது தொடர்­பாக தெளிவான ஒரு வரை­விலக்கணம் அவசியமாகும்.

தற்போதைய சட்டமூலத்தை நாம் மேலோட்டமாக பார்க்கின்றபோது சில கரிசனைகள் ஏற்படுகின்றன. அது மிக நீண்ட ஒரு சட்டமூலமாக இருப்பதால் அது தொடர்பாக ஆராய  காலம் தேவைப்­படுகிறது. இதில் சில பிரச்சினைகள் எமக்கு இருக்கின்றன.  நாம் இது தொடர்பாக இலங்கை அரசாங்க அதிகாரிகளுடன் இணைந்து செயற்­பட்டு வருகின்றோம். அதன் பலனாக நீண்ட காலமாக தடுத்து வைக்­கப்­பட்டிருந்த பல கைதிகள் அண்­மைக்­காலமாக விடுவிக்கப்பட்டு வந்ததை நாம் கண்டோம். தற்போது அந்த சட்டம் மிகக் குறைவாகவே பயன்­­படுத்­­தப்படுகிறது. அண்மைய அரகலய போராட்­டத்தின் போது இதனை பயன்படுத்தி­னர்.

கேள்வி : தற்போதைய ஜனாதிபதி பதவிக்கு வந்ததன் பின்னர் புலம்பெயர் மக்கள் இலங்­கையில் முதலீடுகளை செய்ய வேண்டும். உதவி­களை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அரசாங்கத் தரப்பில் விடுக்கப்­பட்டு வருகி­றது. புலம்பெயர் மக்களுக்கு உங்­கள் செய்தி என்ன?

பதில் : ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதற்கு வெளியில் வாழுகின்ற இலங்கை புலம்பெயர் மக்கள் ஒற்றுமைப்பட வேண்­­டும் என்பதே எனது முக்கிய செய்தியாக இருக்கின்­றது. அவர்க­ளுக்குள் பலபிளவுகள் இருப்­­பதை நாம் பார்த்து வரு­கின்றோம்.

இலங்­கைக்­குள் உள்ள தமிழ் மக்கள் மற்றும் இலங்­கைக்கு வெளியே இருக்கின்ற தமிழ் மக்கள் மத்தி­­யில் பல பிளவுகள் இருப்­பதை நாம் பார்க்கிறோம். இந்தப் பிளவு­கள் சரியான செய்தியை வெளிக்­கொண்டு வராது. எது முக்கியம் என்பது தொடர்பான சரியான விடயத்தை இந்த பிள­வுகள் வெளியே கொண்டு வராது. நீங்கள் முன்­னேறிச் செல்ல வேண்டு­மென்றால் எப்போதும் விட்டுக்கொடுப்பு மனப்பான்மை­யுடன் செயற்பட வேண்டும். எனவே ஒற்று­­மை­­­யுடன் செயற்படுவது சில விட்டுக்­கொடுப்­புக்களுடன் முன்னேறி பயணிக்க உதவும். எனவே இலங்கை புலம்­பெயர் மக்கள் ஒற்றுமைப்பட வேண்­டும். ஒரே இர­வில் முழுமையான நல்லிணக்­கத்தை நோக்கி பய­ணிக்க முடியாது. அதற்கு காலம் எடுக்­கும்.

கேள்வி: இலங்கையில் தமிழ் பேசும் மக்­­­­கள் தமக்கான ஒரு அரசியல் அதிகார பகிர்வை கோரி நிற்கின்றனர். தமிழர்களின் இந்த கோரிக்­­­கையை நீங்கள் எப்படி பார்க்கின்­றீர்கள்?

பதில்: இது மிகப் பெரிய கேள்வியாக இருக்கின்றது. இலங்கை தமிழ் மக்களுக்கு எது சரியானது என்பதை ஐரோப்பிய ஒன்றி­­யத்தால்  தீர்மானிக்க முடியாது. இந்த மக்களின் கோரிக்கை அரசியல் ரீதியாக கையாளப்பட வேண்டும். இங்கும் ஒற்றுமை என்பது மிக முக்கியமானது.

தமிழ் மக்கள் ஒற்றுமைப்பட வேண்டும். 13 ஆம் திருத்தச் சட்டம் ஏற்கனவே அரசியலமைப்பில் இருக்­­கிறது. இந்த அதிகாரங்கள் பயன்­படுத்­­தப்படுவதை அரசியல் சக்திகள் பாராளு­­மன்றத்தில் உறுதிப்­படுத்த வேண்­­டும். முன்னரை போன்று அல்லாது எதிர்காலத்தில் யார் அதிகாரத்துக்கு வர வேண்டுமானாலும் தமிழ் மக்களின் ஆதரவு அவர்களுக்கு தேவையாக இருக்கின்றது.

கடந்த காலத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ராஜபக் ஷ அரசாங்கம் பெற்றது. அதில் தமிழ் மக்களின் பங்களிப்பு நிறையவே இருந்தது.  மாகாண சபை தேர்தல் கூட இன்னும் நடக்கவில்லை. மாகாண சபை  தேர்தல் நடத்தப்படாமல் இருப்பது அரசியலமைப்புக்கு முரணானது.

கேள்வி : நீங்கள் தமிழ்த் தலைவர்களை சந்­தித்து பேசுகிறீர்கள். அவர்கள் தீர்வு உள்­­ளிட்ட  விடயங்கள் குறித்து என்ன கூறுகின்றனர் ?

பதில்: கடந்த சில வருடங்களில் தமிழ் மக்களுக்கு ஒற்றுமையாக சில வலியுறுத்தல்­களை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் இழக்கப்பட்டிருப்பதாக நான் நினைக்கிறேன். தமிழ் அரசியல் கட்சிகளுக்குள் பிளவு காணப்­பட்டது. முன்னாள் ஜனாதிபதி ஒருவர் பெற்ற வெற்றியில் பாரிய வெற்றியில்    தமிழ் மக்களின் வாக்குகளும் இருந்தன. இதிலிருந்து தமிழ் அரசியல் கட்சிகள் ஒரு நிலைப்பாட்டில் இல்லை என்பது தெளிவாகிறது. எனவே இலங்கையிலும் சரி வெளியிலும் சரி தமிழ் மக்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். தமது கோரிக்கையை ஒற்றுமையாக முன் வைத்து வலியுறுத்த வேண்டும்

கேள்வி : ஜெனிவா மனித உரிமை பேரவை­யில் இதுவரை இலங்கை  குறித்து எட்டு பிரே­ரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.  ஐரோப்­பிய ஒன்றியம் அதில் பாரிய வகி­பாகத்தை வகித்தது. நல்லிணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் நிலையை ஐரோப்பிய ஒன்றியம் எவ்­வாறு பார்க்கிறது?

பதில் :  2015 ஆம் ஆண்டு 30 – 1  என்ற பிரேரணை இலங்கை தொடர்பாக நிறை­­வேற்­றப்பட்ட போது எமக்கு பாரிய   எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதற்கு இணை அனுசரணை வழங்கினோம். காணாமல் போனவர்கள் குறித்த அலுவலகம் உருவாக்­கப்பட்டது. உண்மையான நல்லிணக்கத்தை நாம் அப்போது எதிர்பார்த்தோம்.  ஆனால் இலங்கை  அந்த பிரேரணையை அண்மை­யில் வாபஸ் பெற்றுக் கொண்டது.

இலங்கை இதுவரை முழுமையான நல்லிணக்கத்தை அடையவில்லை என்பதே எனது மதிப்பீடாக இருக்கிறது. தற்போது இலங்கை உண்மை மற்றும் நல்லிணக்க குழுவை அமைப்பதற்கு முயற்சிப்பதை நாம் காண்கிறோம். அவற்றை நாம் வரவேற்கின்றோம். ஆனால் இந்த விட­­யத்தில் வசனங்களை விட செயற்­பாடுகளே  அவசியமாக இருக்கின்றன. வார்த்தை­களை விட செயல்பாடுகள் வலிமை­மிக்கவை.

கேள்வி : இலங்கை பிரதிநிதிகள் தென்னா பிரிக்காவுக்கு விஜயம் செய்து அங்குள்ள உண்மை  மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு குறித்து ஆராய்ந்துள்ளனர். அதனை எப்படி பார்க்கிறீர்கள் ?

பதில் :    வார்த்­தைகளை விட செயல்பாடு­களே  அவசிய­மாகின்றன.  அதுவே அர்த்தம் மிக்கதாகவும் தாக்கமிக்கதாகவும் இருக்கும்.

கேள்வி : வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எவ்வாறான திட்டங்களை ஐரோப்­பிய ஒன்றியம் செய்கிறது?

பதில் : பாதிக்கப்பட்ட மக்களின் மன ஆரோக்­கியம் என்பது மிக முக்கியமானது. பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மன ஆரோக்­கியத்தை மேம்படுத்த வேண்டும். தமது அன்புக்குரிய  உறவுகளை இழந்தவர்கள்இ சொத்துக்­களை இழந்தவர்கள் என பலர் மன­ரீதி­யாக பாதிக்கப்பட்டு இருக்கின்­ற­னர். அவர்களுக்கு மன ஆரோக்கியம் மிக அவசிய­மாகும். நாம் அதனை செய்கின்றோம். அதே­போன்று தொழில் முயற்சிக்கான உதவிகள்இ  வாழ்­வாதார உதவிகள் போன்ற திட்­டங்­களை முன்னெடுக்கின்றோம். ஐரோப்­பிய ஒன்றி­யம் எப்போதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு   உதவித் திட்டங்களை முன்னெடுப்பதில் ஆர்வமாக இருக்கின்றது.

கேள்வி : உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தாம­த­மாகிக் கொண்டிருக்கின்றது. எதிர்க்கட்சி­கள் குற்­றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. ஐரோப்­­பிய ஒன்றியம் இதனை எவ்வாறு பார்க்­கிறது?

பதில் : அரசியலமைப்புக்கு ஏற்ப சகல விதமான தேர்தல்களும் உரிய  நேரத்தில் நடத்தப்பட வேண்டும். தேர்தல் நடத்தப்­படாமல் இருப்பது எப்போதும்  பிரச்சினைக்­குரியதாக இருக்கும். தேர்தல்கள் அரசியல­மைக்கு ஏற்ப நடத்தப்படாமல் இருப்பது கரிசனைக்குரிய விடயம்.   தற்போது உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக பல­ரும் வலியுறுத்தல்களை மேற்கொண்டு வருகின்­றதை பார்க்கின்றேன்.

அதாவது நீண்ட காலமாக நடத்தப்படாமல் இருக்கின்ற  மாகாண சபை தேர்தலைவிட உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இந்த வலியுறுத்தல்கள் அதிக­மாக காணப்படுகின்றன. உள்ளூராட்சி தேர்தலுக்கான வலியுறுத்தல்களை நான் வரவேற்­கின்றேன். ஆனால் இந்த வலி­யுறுத்தலானது சகல விதமான தேர்தல்­களுக்கும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையே நாம் விரும்புகிறோம்.  எனினும் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் விரைவில் நடைபெறும் என்று நம்புகிறேன்.

கேள்வி : இலங்கை மக்களுக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில் : இலங்கை மிகப்பெரிய ஆற்­றலை கொண்டு இருக்கின்ற நாடு. இலங்கை­யின் அழகை ரசிப்பதற்காக அதிக அளவு வெளி­நாட்டவர்கள் இலங்­கைக்கு வருகின்றனர். இலங்கை மக்களின் நேர்மைத் தன்மை வெளிநாட்டவர்களை கவர்கின்றது.  ஆனால் அந்த ஆற்றல் முழுமையாக பயன்­படுத்தப்­படாமையுள்ளமை கவலை தருகின்றது. இலங்கை மக்கள் மிகவும் கனிவானவர்கள். கருணை­மிக்க­வர்கள். இலங்கை  அண்மைய கால வரலாற்றுடன் சம்பந்தப்பட்ட நாடு அல்ல. இலங்கை மிக  நீண்ட கால வர­லாற்றை கொண்ட நாடு. மக்கள் மிகவும் கௌரவ­மானவர்கள்.

கேள்வி : இலங்கையின் உணவு   வகைகள் பற்றி..?  

பதில் : இலங்கையின்  உணவுகளை நான் ருசித்து உட்கொண்டுள்ளேன். முக்­கிய­மாக இலங்கையில் உற்பத்தி செய்யப்­படு­கின்ற உணவுகள் தனித்துவமானவை. மரக்கறி வகைகள் சிறப்பானவை. இலங்கை பலாப்­பழம் மிகவும் சுவையாக இருக்கும்.

நேர்காணல் – ஆர்.ரொபட் அன்டனி

படப்பிடிப்பு ஜே.சுஜீவகுமார்