அம்பாறையில் புடவைக்கடையில் தீ விபத்து

219 0

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள  தம்பிலுவில்  பிரதான வீதியிலுள்ள புடவைக் கடை ஒன்று இன்று  (23) அதிகாலை 3 மணியளவில் தீப்பற்றி எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கடை  வழமையாக நேற்று புதன்கிழமை இரவு பூட்டிவிட்டு சென்ற நிலையில் சம்பவதினமான இன்று வியாழக்கிழமை  அதிகாலை 3 மணியளவில் கடை தீப்பற்றி எரிவதை அருகிலுள்ள பொதுமக்கள் அவதானித்ததையடுத்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தினர்.

இதனையடுத்து தீயணைக்கும் படை மற்றும் பொலிஸார் இராணுவத்தினர்  இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன் மேல் மாடியை கொண்ட கடை தொகுதி முற்றாக எரிந்துள்ளதுடன் சுமார் 5 கோடி ரூபாவுக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.