துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை பிரதேசத்திற்குரிய நீர் விநியோக குழாய்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்

114 0

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகத்திற்கு என கொண்டுவரப்பட்டு துறைமுகத்தில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நீர் விநியோக குழாய்களை விடுவித்து பளை பிரதேசத்திற்கான நீர் விநியோக நடவடிக்கை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் தினேஸ் குணவர்தனவிற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  மு. சந்திரகுமார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

கடந்த 07.03.2023 திகதியிடப்பட்டு எழுதப்பட்ட கடிதம் நீர் வழங்கலுக்கு பொறுப்பான அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பளையில் ஏற்கனவே  நீர்த்தாங்கி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த் தாங்கி கிளிநொச்சி நீர்த்தாங்கியுடன் இணைக்கப்படல் வேண்டும். இதற்காக ஏ9 பிரதான் வீதியில் பரந்தன் சந்தியிலிருந்து பளை நீர்த்தாங்கி வரை 26 கிலோ மீற்றர் தூரத்திற்கு குழாய்கள் பதிக்க வேண்டும்.

இதற்காக கேள்வி கோரல் 08.02.2023 மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவு திகதி 15.03.2023 அன்று நிறைவுப்பெற்றுள்ளது. ஒப்பந்த மதிப்பு நிதி 313 மில்லியன் ரூபாக்கள் ஆகும். ஆனால் குறித்த ஓப்பந்ததிற்கு தேவையான குழாய்களை நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையே வழங்க வேண்டும் ஆனால் அவர்களுக்கு என கொண்டு வரப்பட்டுள்ள நீர் விநியோக குழாய்கள் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாணத்திற்கு அன்னளவாக 350 கிலோ மீற்றருக்கு என கொண்டுவரப்பட்ட நீர்க் குழாய்கள் 188 கொள்கலன்களில் துறைமுகத்தில் தேங்கி கிடக்கிறது. ஆதனை விடுவிப்பதற்கு 1.8 பில்லின் ரூபாக்கள் துறைமுக அதிகார சபைக்குச் செலுத்த வேண்டும் ஆனால்  பளை குடிநீர் திட்டத்திற்க்கான 26 கிலோமீற்றருக்குரிய குழாய்ஙகள் மாத்திரமே தேவைப்படுகிறது.  எனவே குறித்த குழாய்களை விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றேன் என அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.