பிரேஸில் அரச தொழில்களுக்கு 30% கறுப்பின / கலப்பினத்தவர்கள் நியமிக்கப்பட வேண்டும்

79 0

பிரேஸிலின் மத்திய அரசாங்கத்தின் தொழில்களுக்கு நியமிக்கப்படுபவர்களில் குறைந்தபட்சம் 30 சதவீதமானோர் கறுப்பினத்தவர்களாக அல்லது கலப்பினத்தவர்களாக இருக்க வேண்டும் என்ற ஆணை வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா நேற்று இந்த ஆணையில் கையெழுத்திட்டுள்ளார்.

இடதுசாரியான லூலா டா சில்வா, 2003 முதல் 2010 ஆம் ஆண்டு வரை இரு தவணைகள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர். 13 வருடங்களின் பின்னர் கடந்த ஜனவரி மாதம் 3 ஆவது தடவையாக அவர் ஜனாதிபதியாக பதவியேற்றார்.

பிரேஸிலிய சமூகத்தைப் பிரதிபலிப்பதாக பிரேஸில் அரசாங்கத்தை மாற்றப்போவதாக அவர் உறுதியளித்திருந்தார். பிரேஸிலின் 21.3 கோடி மக்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் கறுப்பினத்தவர்கள் அல்லது கலப்பினத்தவர்கள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘இனவாதம் என்பது சமத்துவமின்மையின் வேர். அதனால் தான், பெருந்தோட்டங்களில் கொள்ளை நோய்க்கு எதிராக போராடுவதைப் போன்று அதற்கு எதிராக நாம் போராட வேண்டும்” என தலைநகர் பிரசிலியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி லூலா டி சில்வா கூறினார்.

மேற்படி ஆணையிலும், இன ரீதியான சமத்துவத்தை ஊக்குவிக்கும் மேலும் பல திட்டங்களுக்கான ஆவணங்களிலும் அங்கு வைத்து அவர் கையெழுத்திட்டார்.

‘இனத்துவ மற்றும் பாலின சமத்துவம் இல்லாமல் ஜனநாயகம் இருக்கப்போவதில்லை’ என அவர் கூறியுள்ளார்.