எலி மொய்த்த உணவுகள் விற்பனை செய்ய இருந்த உணவகத்திற்கு மன்னார் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

82 0

மன்னார் நகரில் பிரபல உணவு விற்பனை நிலையத்தில் சுகாதாரமற்ற  மனித பாவனைக்கு  பொருத்தமற்ற உணவுகளை வைத்திருந்த நிலையில், குறித்த உணவகத்துக்கு எதிராக நேற்று (22) மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணினையினால் மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

மன்னார் நகரில் பிரபல உணவு விற்பனை நிலையத்தில் சுகாதாரமற்ற  மனித பாவனைக்கு  பொருத்தமற்ற எலி  மொய்த்த  உணவுகள்  களஞ்சியப் படுத்தியும் , விற்பனைக்காக வைத்திருப்பது தொடர்பாகவும் உணவுகள் மேல் எலிகள் பாய்ந்து ஓடும் வீடியோ காணொளியை மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்கு பாவனையாளர் ஒருவரால் அனுப்பப்பட்டுள்ளது.

அதற்கு அமைவாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரிக்கு விடுக்கப்பட்ட பணிப்புரையின் பேரில்  குறித்த உணவு கையாளும் நிறுவனம் ஒன்று நேற்று முன்தினம் தினம் செவ்வாய்க்கிழமை (21) மன்னார் பொது சுகாதார பரிசோதகர்களினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது,  சுகாதாரமற்ற முறையில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற எலி மொய்த்த உணவுகளை களஞ்சியப்படுத்தியும் விற்பனைக்காக வெளிக்காட்டியும் வைத்திருந்தமை கண்டறியப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து நேற்று புதன்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உணவகத்துக்கு எதிராக 5 குற்றச்சாட்டுகள் முறையிடப்பட்டதற்கு அமைவாக குறித்த உணவக உரிமையாளருக்கு  70,000 ரூபாய்  தண்ட பணம் செலுத்துமாறும்  அதனை செலுத்த  தவறும் பட்சத்தில்  ஒவ்வொரு குற்றத்துக்காகவும்  3 மாதம் சிறை தண்டனையும்  29.03.2023 வரை  வியாபாரத்தை தடை செய்து நீதவான் நீதி மன்றத்தினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

மேலும் கைப்பற்றப்பட்ட உணவுப் பொருட்களும் அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.