சிறைச்சாலைகளை மூடி பாடசாலைகளைத் திறக்க வேண்டும்

237 0

சிறைச்சாலைகளை மூடிவிட்டு பாடசாலைகளைத் திறக்கும் ஒரு நாடு உருவாகவேண்டுமென மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டில் வைத்தியசாலைகள் குறைந்து சுகதேகியான மக்கள் அதிகமாக வாழும் நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமெனவும், கேகாலை புனித மரியாள் கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

உலகில் மனித சமூகத்தின் பயணத்திற்குத் தடையாகவுள்ள முக்கிய அம்சம் நல்ல மனிதர்களின் அமைதியும் வெற்று மனிதர்களின் கோஷமும் ஆகும் என்ற மாடின்லூதர்கிங்கின் கூற்றை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, வெற்று மனிதர்களின் கோஷங்களை குறைப்பதற்கு கல்விமான்கள் நாட்டில் அதிகமாக உருவாக வேண்டுமென வலியுறுத்தினார்.

கீர்த்திமிக்க வரலாற்றைக் கொண்டுள்ள கேகாலை புனித மரியாள் கல்லூரி நாட்டுக்கு சிறந்த பிரஜைகளை உருவாக்கித் தந்துள்ளதாகவும், திரிபீடகம், விவிலியம் மற்றும் குர்ஆனை அடிப்படையாகக்கொண்ட இக்கல்லூரி தேசிய நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகும் எனவும் குறிப்பிட்டார்.

 

மாணவர்களின் ஆக்கங்கள் வைக்கப்பட்டிருந்த கண்காட்சிக் கூடங்களையும் ஜனாதிபதி பார்வையிட்டார். தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக தமது திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கு ஜனாதிபதி விருதுகளையும் வழங்கிவைத்தார்.