மன்னார் தீவுப் பகுதியில் காற்றாலை மின்சாரம் அமைக்கும் வேலைத்திட்டம்

117 0

மன்னார் தீவுப்பகுதியில் 2ம் கட்ட காற்றாலை மின்சாரம் அமைத்தல் தொடர்பில் தீவுப் பகுதி மக்களின் எதிர்ப்பு நடவடிக்கை அதிகரித்து வரும் நிலையில் காற்றாலை மின்சாரம் தொடர்பில் அரசாங்கத்தினால் சூழலியல் தாக்கல் அறிக்கை (E.I.A) ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வறிக்கை தொடர்பில் பொது அமைப்பு மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ள நிலையில் மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து உண்மை தன்மை இல்லை என்பதே மக்கள் பிரதிநிதிகளின் கருத்தாக அமைந்துள்ளது.

காற்றாலை மின்சாரம் மன்னார் தீவுப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்கு பல்வேறு தாக்கத்தை செலுத்தும் என்பதை நோக்கமாகக் கொண்டு தீவுப் பகுதிக்குள் நிறுவுவதை முற்றாக நிறுத்தும்படி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நடவடிக்கை தொடர்பில் ஆராயும் நோக்கத்துடன் ‘சூழலியல் நீதிக்கான மையம்’ பிரதிநிதிகள் அடங்கிய குழு கொழும்பிலிருந்து மன்னாருக்கு வருகை தந்து நேற்று (20.03.2023) காலை சுமார் 9 மணி அளவில் “OPEnE” நிறுவனம் ஒன்றின் மாநாட்டு மண்டபத்தில் மன்னார் மாவட்ட மற்றும் மன்னர் தீவு பகுதி மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

குறித்த கலந்துரையாடலில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பிலும் மக்களின் விருப்பு வெறுப்பு தொடர்பிலும் ஆராய்ந்து கருத்துக்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மன்னார் தீவு பகுதியில் மேலதிகமாக நிறுவப்படும் காற்றாலை மின்சாரம் பொருத்தும் வேலை திட்டத்தை மக்கள் முற்றாக தடை செய்யும் பல்வேறு காரணங்கள் அடங்கிய கருத்தை கொழும்பிலிருந்து வருகை தந்த குழுவினரிடம் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த நடவடிக்கைக்காக சர்வதேச மற்றும் தேசிய ரீதியில் மக்களிடம் பெறப்பட்ட கருத்துக்கள் ஊடகங்கள் வாயிலாக தெரிவிப்பதுடன் சட்ட நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளையும் அதனை மேற்கொள்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.