இம்ரான் கான் மீது பயங்கரவாத வழக்கு- கட்சிக்கு தடைவிதிக்க பாகிஸ்தான் அரசு முடிவு

127 0

பாகிஸ்தானில் இம்ரான் கான் பிரதமராக இருந்த போது உலக தலைவர்கள் கொடுத்த விலை உயர்ந்த பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி ரூ.5 கோடிக்கு விற்பனை செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இம்ரான் கான் கோர்ட்டில் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இதனால் அவரை கைது செய்து நேரில் ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் இந்த வழக்கு தொடர்பாக இம்ரான் கான் கோர்ட்டில் ஆஜரானார்.

அந்த சமயம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் அவரது வீட்டுக்குள் புகுந்து அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு திரண்டு இருந்த ஏராளமான தொண்டர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், இம்ரான் கான் கட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டது. வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இதில் சில போலீசார் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தெக்ரீக்-இ-இன்சாப் கட்சித் தலைவர்கள் உள்பட ஏராளமான தொணடர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஏராளமான இம்ரான் கான் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். போலீசார் இம்ரான் கான் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அவரது தலைமையிலான கட்சிக்கு தடை விதிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் உள்துறை மந்திரி ராணா சனாவுல்லா நிருபர்களிடம் கூறியதாவது:-

இம்ரான் கான் வீட்டில் நடந்த சோதனையில் அங்கிருந்த ஆயுதங்கள், பெட்ரோல் குண்டுகள் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டு உள்ளன. பயங்கரவாத அமைப்பாக இருக்கும் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய கைற்பற்றப்பட்ட ஆயுதங்களும், குண்டுகளும் போதுமான ஆதாரமாக உள்ளது. இதனால் அக்கட்சிக்கு தடை விதிப்பது குறித்து சட்டக் குழுவினருடன் அரசு ஆலோசனை நடத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் எனது வீட்டுக்குள் சட்ட விரோதமாக நுழைந்து சோதனை நடத்தியதற்காகவும், தொணடர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்காகவும் பஞ்சாப் மாகாண போலீஸ் அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்ரான் கான் கோரிக்கை விடுத்து உள்ளார்.