சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் மட்ட கலந்துரையாடல் நாளை

89 0

லங்கைக்கு நிதியுதவி வழங்குவது குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் மட்ட கலந்துரையாடல் நாளை திங்கட்கிழமை (20) இடம்பெறவுள்ளது.

நிதி ஒத்துழைப்பு தொடர்பான அறிவிப்பு நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும். அத்துடன் ஒப்பந்த அறிக்கை இவ்வாரம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் முதற்கட்ட நிதியுதவி கிடைத்தவுடன் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைவடையும் என நாட்டு மக்களுக்கு பொய்யான வாக்குறுதி வழங்கப் போவதில்லை.

வெளிநாட்டு கையிருப்பை ஸ்திரப்படுத்திக்கொண்டு அத்தியாவசிய பொருள் கொள்வனவை முகாமைத்துவம் செய்வது குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு தொடர்பில் வினவியபோதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்வதற்காக நடைமுறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மறுசீரமைப்புக்கள் தற்காலிகமானதல்ல.

நிபந்தனைகளை நான்கு வருட காலத்துக்கு மாத்திரம் வரையறுத்தால், நான்கு வருடங்களுக்குப் பின்னர் நாடு மீண்டும் வங்குரோத்து நிலையை அடையும்.

போலியான வாக்குறுதிகள் வழங்கும் பாரம்பரியமான அரசியல் நிலையில் இருந்து மாற்றமடைவதற்கான வழியை சர்வதேச நாணய நிதியம் காண்பித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதை தவிர மாற்றுவழிகள் ஏதும் தற்போது கிடையாது.

வங்குரோத்து நிலையை அடைந்த காரணத்தினால் இலங்கையின் கடன் நிலைபேறான தன்மையை இழந்துள்ளது. ஆகவே, சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றால் இழக்கப்பட்ட கடன் நிலைபேறான தன்மையை மீள பெற்றுக்கொள்ள முடியும்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு கடந்த ஆறு மாத காலமாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளோம். அரச வருமானத்துக்கும் செலவுக்கும் இடையிலான பற்றாக்குறை மற்றும் வங்குரோத்து நிலை ஆகிய இரு காரணிகளினால் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது தாமதமாகியது.

அரச வருமானத்தை பெற்றுக்கொள்வதற்காக வரி திருத்தம் செய்யப்பட்டது. தற்போது அரச வருமானத்துக்கும், அரச செலவுக்கும் இடையில் சமனிலை தன்மை காணப்படுகிறது.

இதனை நிலையாக பேணுவதற்கு உறுதியான கொள்கைத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த கொள்கை திட்டங்களை நிலையான தன்மையில் பேணுவதற்கு சட்ட வழிமுறைகளை உருவாக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு நிதியுதவி வழங்குவது குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் மட்ட கலந்துரையாடல் நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.

நிதி ஒத்துழைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும். அத்துடன் ஒப்பந்த அறிக்கை இவ்வாரத்துக்குள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்.

செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படும்.

சர்வதேச நாணய நிதியத்தின் முதற்கட்ட நிதியுதவி கிடைத்தவுடன் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைவடையும் என நாட்டு மக்களுக்கு பொய்யான வாக்குறுதி வழங்கப் போவதில்லை.

வெளிநாட்டு கையிருப்பை ஸ்திரப்படுத்திக்கொண்டு அத்தியாவசிய பொருள் கொள்வனவை முகாமைத்துவம் செய்வது குறித்து விசேட கவனம் செலுத்தப்படும்.

பொருளாதார மீட்சிக்கான நிலையான திட்டங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புக்கள் ஊடாக வகுக்கப்படும்.

நாணய நிதி ஒத்துழைப்பை தொடர்ந்து ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி உட்பட சர்வதேச நாடுகளிடமிருந்து கடனுதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.