நீதிமன்றத்தோடு விளையாடுவதற்கு நிறைவேற்று ஜனாதிபதிக்கு இடமளிக்க முடியாது

100 0

நீதிமன்ற தீர்ப்புக்கு நிறைவேற்று அதிகாரி கீழ்ப்படாவிட்டால், சாதாரண மக்கள் கீழ்ப்படிவார்கள் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?

அதனால் நீதிமன்றத்துடன் விளையாடுவதற்கு நிறைவேற்று ஜனாதிபதிக்கு எங்களால் இடமளிக்க முடியாது. அதற்கு எதிராக சட்டத்துறை சார்ந்தவர்களாகி, நாங்கள் அதற்கு எதிராக ஒரு சமூகமாக இருந்து குரல் கொடுக்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மாத்தறை சட்டத்தரணிகள் சங்கம் இன்று (19) ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

சட்டத்தின் ஆதிக்கத்துக்கு எதிராக பாரிய பிரச்சினைகள் தோன்றி வருகின்றன. இதில் நீதிமன்ற சுயாதீன தன்மைக்கு ஏற்படுத்திக்கொண்டிருக்கும் தடைகள், நாங்கள் காணும் பிரதான அச்சுறுத்தலாகும்.

நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்டிருக்கும் சில கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல், நீதிபதிகளை அழுத்தங்களுக்கு உட்படுத்த நிறைவேற்றுத்துறை  முயற்சிக்கிறது.

துறைசார் தொழில் வல்லுநர்கள் என்ற அடிப்படையில் அதற்கு நாங்கள் எதிராக செயற்பட வேண்டும். நீதிமன்ற சுயாதீனத் தன்மை தொடர்பில் நிறைவேற்றுத்துறை தலையிடுவதற்கு நாங்கள் இடமளிக்க முடியாது.

நீதிபதிகள் தீர்ப்பு வழங்கும்போது அது தொடர்பில் வேறு முறைமைகளை கையாண்டு நீதிபதிகளை நோவினைப்படுத்த எங்களுக்கு இடமளிக்க முடியாது.

நீதிமன்ற தீர்ப்புகளுக்கு நிறைவேற்றுத்துறை கீழ்ப்படியாவிட்டால், சாதாரண மக்கள் நீதிமன்ற தீர்ப்புக்களுக்கு கீழ்ப்படிவார்கள் என எவ்வாறு நாம் எதிர்பார்க்க முடியும்?

அதனால், இது நிறைவேற்றுத்துறையால் மேற்கொள்ளப்படும் மிகவும் மோசமான முன்மாதிரியாகும்.

அதனால், நீதித்துறை சார்ந்தவர்கள் என்ற வகையில் நிறைவேற்றுத்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குரல்கொடுக்க வேண்டும். எதிர்வரும் ஒரு மாத காலத்துக்குள் அது தொடர்பில் தீர்மானிக்க வேண்டும்.

நீதிமன்ற நடவடிக்கையில் தலையிட வேண்டாம் என இது தொடர்பாக நிறைவேற்று அதிகாரிக்கு கடந்த வாரம் அறிவித்திருக்கிறோம். ஏனெனில், வரலாற்றில் எப்போதும் நிறைவேற்றுத்துறை முறைகேடாக நீதிமன்ற நடவடிக்கையில் தலையிடும்போது சட்டத்தரணிகள் சமூகம் அதற்கு எதிராக உறுதியாக செயற்பட்டிருக்கிறது.

அதனால் நீதிமன்றத்துடன் விளையாடுவதற்கு நிறைவேற்று ஜனாதிபதிக்கு எங்களால் இடமளிக்க முடியாது.

சட்டத்துறை சார்ந்தவர்களாகி, நாங்கள் அதற்கு எதிராக ஒரு சமூகமாக இருந்து குரல் கொடுக்க  வேண்டும்.

70, 80 காலப்பகுதிகளில் நீதிமன்றங்களுக்கு எவ்வாறான தடைகள் ஏற்பட்டன என்பதை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். அதனால் இதற்கு இடமளிக்கப்போவதில்லை என நாங்கள் உறுதிபூணுவோம் என்றார்.