தமிழர்களைப் பாதுகாக்க முன்வாருங்கள்

127 0

மிகையான இராணுவமயமாக்கலின் மூலம் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுவரும் திட்டமிடப்பட்டவாறான இனவழிப்பில் இருந்து தமிழீழத்தைப் பாதுகாப்பதற்கு முன்வருமாறு பிரான்ஸ் தமிழர் கலாசார அமைப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் கோரிக்கைவிடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை குறித்து பிரான்ஸ் தமிழர் கலாசார அமைப்பின் சார்பில் உரையாற்றிய நிஷாந்தி பீரிஸ் இதுபற்றி மேலும் கூறியதாவது:

தமிழீழ மக்கள் அதிகரித்துவரும் இராணுவமயமாக்கத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இருவருடகாலமாக வடமாகாணத்தின் தனியொரு மாவட்டத்தில் 20 இற்கும் மேற்பட்ட சோதனைச்சாவடிகள் இயங்கிவருகின்றன. இச்சோதனைச்சாவடிகள் தமிழ்மக்களைத் தொடர்ந்து இராணுவ ஒடுக்குமுறையின்கீழ் வைத்திருப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. அந்த சோதனைச்சாவடிகளில் தமிழ்மக்கள் பெருமளவிற்குப் பக்கச்சார்பானமுறையில் நடத்தப்படுகின்றார்கள்.

திட்டமிட்டவகையிலான இராணுவமயமாக்கலுக்குத் தமிழீழம் முகங்கொடுத்துவருகின்றது. 400 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட்டிருந்த குறித்தவொரு இராணுவ முகாம், அண்மையகாலத்தில் 3,000 ஏக்கருக்கு விஸ்தரிக்கப்பட்டிருக்கின்றது.

இராணுவ முகாம் விஸ்தரிப்புக்காக 434 தமிழ் குடும்பங்களுக்குச் சொந்தமான வாழ்வாதார மற்றும் விவசாயக்காணிகள் கையகப்படுத்தப்பட்டிருக்கின்றன.

போரின் பின்னர் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்மக்களின் காணிகள் மகாவலி அதிகாரசபை மற்றும் வனப்பாதுகாப்புத்திணைக்களம் ஆகியவற்றால் கூட்டாகக் கையகப்படுத்தப்பட்டு, சிங்களமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதிலடங்கும் 8 கிராமசேவகர் பிரிவைச்சேர்ந்த மக்களனைவரும் மகாவலி அதிகாரசபையின்கீழ் செல்வதை விரும்பவில்லை. எனவே திட்டமிடப்பட்டவாறான தமிழர் இனவழிப்பில் இருந்து தமிழீழத்தைப் பாதுகாப்பதற்கு இப்பேரவை உறுப்பினர்கள் முன்வரவேண்டும்.

அதேபோன்று போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை என்பன தொடர்பில் நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டிருப்போருக்கு எதிராக அமெரிக்கா மற்றும் கனேடிய அரசாங்கங்கள் விதித்ததைப்போன்ற தடைகளை விதிக்குமாறு இப்பேரவையின் உறுப்புநாடுகளுக்கு அழைப்புவிடுக்கின்றோம்.

மேலும் இலங்கைக்கென விசேட அறிக்கையாளரொருவரை நியமிக்குமாறும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறும் பேரவையின் உறுப்பினர்களிடம் வலியுறுத்துகின்றோம் என்று தெரிவித்தார்.