டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூடத்தின் வெள்ளிவிழா நிகழ்வு

251 0

11.03.2023 சனிக்கிழமையன்று கேர்ணிங் நகரில் மண்டபம் நிறைந்த மக்களுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கலைக்கூடத்தில் கற்கும் மாணவர்கள் தமிழர் மரபுவழிக் கலைகளான காவடி, கோலாட்டம் ஆகிய ஆடல்களுடன் ஆசிரியர்களையும் நிர்வாகிகளையும் வரவேற்றனர். மேடை நிகழ்வுகளின் தொடக்க நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு கொடியேற்ற நிகழ்வுகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, ஈகச் சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து 2 ஆம் லெப். மாலதியின் திருவுருவப்படத்திற்கு மலர் வணக்கம் செய்யப்பட்டது.

இந் நிகழ்வுகளுக்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருந்தவர்களின் சிறப்புரைகள் நிகழ்வுகளுக்கு மெருகூட்டின. ஐரோப்பிய ஒன்றியத்தின் டென்மார்க் உறுப்பினரான திரு. Nils Fuglsang அவர்களின் சிறப்புரையில் ஈழத்தமிழர்களுக்கான தீர்வுகள் சார்ந்து உறுதியாகப் பேசினார். நிகழ்விற்கு பல கட்சிகளையும் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் வருகைதந்திருந்தார்கள், அவர்களில் டெனிஸில் சிறப்புரையாற்றிய ஏனையோர், உயர்கல்வியில் தமிழையும் இணைப்பதற்கான முயற்சிகளைச் செய்வதாகவும் உரையாற்றினர். நோர்வேயில் இருந்து வருகை தந்த தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை இணை இணைப்பாளர் திரு. சிவசிதம்பரம் நல்லதம்பி அவர்களும் அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் உயர் கல்விப் பொறுப்பாளரான சுவிசைச் சேர்ந்த திரு. பார்த்திபன் கந்தசாமி அவர்களும் மாலதி தமிழ்க் கலைக்கூடத்தை வாழ்த்தியதுடன் தமிழ்மொழிக் கல்வியை மேன்மேலும் மேம்படுத்த நாங்கள் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றியும் குறிப்பிட்டனர். பிரித்தானியாவில் இருந்து வருகை தந்த முன்னாள் கிழக்குப் பல்கலைக்கழகக் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சுகுமார் பாலசிங்கம் அவர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து மதிப்பளிப்பு நிகழ்வுகள் நடைபெற்றன. எமது அடுத்த தலைமுறையினருக்குத் தாய்மொழியின் மூலம் தமிழரது அடையாளங்களைக் கடத்தும் பணியில் நேரகாலம் பாராது உழைத்துக் கொண்டிருக்கும் நிரவாகிகளுக்கும் ஆசிரியர்களுக்குமான மதிப்பளிப்பு நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. 12ஆம் ஆண்டை நிறைவு செய்த எமது எதிர்காலச் செல்வங்கள் எம்மையும் எமது இனத்தையும் பெருமையடையச் செய்யப் போகும் இளையோருக்கான மதிப்பளிப்பு மனத்துக்கு நெகிழ்வான நிகழ்வாக அமைந்தது. டென்மார்க்கில் பல துறைகளில் சிறந்து விளங்கும் இவர்கள் தாய்மொழிப் பற்றுடனும் வாழ்கிறார்கள் என்பதை பலராலும் உணரக் கூடியதாக இருந்தது. பட்டயக் கல்வி முடித்து பட்டம் பெற்றோருக்கும் இந்நிகழ்வில் மதிப்பளிக்கப்பட்டது.

மாலதி தமிழ்க் கலைக்கூடத்தைச் சேர்ந்த சிறார்களின் நடனங்கள் இடையிடையே நிகழ்வுக்கு சிறப்பளித்தன. இந்நிகழ்வுகளுக்கு எல்லாம் மணிமுடியாக வெள்ளிவிழா மலர் வெளியீடு அமைந்தது எனலாம். மாலதி தமிழ்க் கலைக்கூடத்தின் 25 ஆண்டுகால பதிவுகளைத் தாங்கி இருக்கும் இம்மலரானது தமிழரின் வரலாற்று ஆவணமாகும். இறுதியாகத் தாயக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவடைந்தன.