எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களை மிரட்டியவர்களுக்கு முறைப்பாடு!

119 0

” நாவற்குழி சம்பவம் தெரியும் தானே .. அப்படி சம்பவம் செய்வோம்” என எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களை மிரட்டியவர்கள் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைதடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென ஏற்பட்ட பழுது காரணமாக திருத்த வேலைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 09 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தமது மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருள் நிரப்புமாறு கூறியுள்ளனர்.

அதற்கு ஊழியர்கள் திருத்த வேலை நடைபெறுவதனால் , எரிபொருள் நிரப்ப முடியாது என கூறியுள்ளனர். அதனை அடுத்து ஊழியர்களுடன் முரண்பட்டு , ” நாவற்குழி சம்பவம் தெரியும் தானே .. அப்படி சம்பவம் செய்வோம்” என மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

இது தொடர்பில் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த மாதம் நாவற்குழி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் QR இல்லாமல் எரிபொருள் நிரப்ப கேட்ட போது , ஊழியர் அதற்கு மறுத்த போது , தமது உடைமையில் மறைத்து வைத்திருந்த வாளினால் , ஊழியரை வீதியில் துரத்தி துரத்தி வாளினால் வெட்டி காயப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்று இருந்தனர்.

அந்த சம்பவத்தினை கூறிய கைதடி எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களை நேற்றையதினம் மிரட்டி உள்ளனர்.