11 நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் சுவிசு நாட்டினை அண்மிக்கின்றது.

126 0

இன்று 27/02/2023 காலை எர்ச்தைன் நகரசபை முன்றலில் அகவணக்கத்துடன் ஆரம்பித்த மனிதநேய அறவழிப் போராட்டம் பிரான்சுக் காவல் துறையின் வழிகாட்டலுடன் ஏர்செய்ன், பேன்பெட், கொல்மார் போன்ற மாநகரசபைகளிலும் முக்கிய அரசியற் சந்திப்புக்கள் மேற்கொண்டு தொடர்ந்து முலூசு மாநகரை நோக்கி பயணிக்கிறது.

சிறிலங்கா பேரினவாத அரசின் பொய் முகத்திரை கிழித்தெறியவும் திட்டமிட்டு தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தவும் பிரான்சு அரசாங்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் முக்கிய பங்காற்றவேண்டும் எனக் கோரி 26 வது தடவையாக தொடருகின்ற அறவழிப்போராட்டத்தின் தொடர்ச்சியினை இந்த மாநகரசபைகள் நன்கு அறிந்திருந்ததால் மிக உறுதியான நம்பிக்கை வாக்குறுதிகளைத் தந்திருந்தன. குறிப்பாக தாம் பிரான்சு நாட்டின் வெளி நாட்டமைச்சிற்கும் அரச அதிபருக்கும் இதுவரை தமிழர்கள் நிலை சார்ந்து அனுப்பிய கடிதங்கள் மற்றும் இம்முறை இறுதியாக அனுப்பிய கடிதங்கள் போன்றவற்றை மனித நேய ஈருருளிப்போராட்டம் மேற்கொள்வோரிடம் சமர்ப்பித்தனர்.

தொடர்ந்தும் எமது போராட்டம் எழுச்சியோடு பயணிப்பது கண்டு பாராட்டுத் தெரிவித்த முதல்வர்கள் சிறிலங்கா பேரினவாத சர்வாதிகார அரசு தமிழின அழிப்பிற்கு பொறுப்புக்கூறும் வகையில் அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் நீதி விசாரணைக்கு முகம் கொடுக்க வேண்டும் எனவும் அதற்கு தாமும் ஆவன செய்வதாகவும் அல்சாசு மாநிலம் தமிழர்களின் போராட்டங்களுக்கு நிச்சயம் ஆதரவு நல்கும் எனவும் கூறினர். மற்றும் பிரான்சு ஊடகங்களும் இவ் அறவழிப் போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தனர்.

“எந்த ஒரு விடுதலை இயக்கமும் தனியாக நின்று, மக்களுக்குப் புறம்பாக நின்று, விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. அது நடைமுறைச் சாத்தியமான காரியமுமல்ல”
-தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன்.

“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”