பின்லாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்த அனைத்துலக,தமிழீழ இராஜதந்திரக் கட்டமைபு.

252 0

பின்லாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் பெக்கா காவிஸ்தோ(pekka havisto) அவர்களிற்கும்,அனைத்துலக,தமிழீழ இராஜதந்திரக் கட்டமைப்பிற்குமிடையில்(IDCTE) இன்று,சந்திப்பொன்று நடைபெற்றது. இச்சந்திப்பின் போது பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
1)தமிழர் தாயகத்தின் இன்றைய நிலவரம்.
2) சிறிலங்கா அரசினால் வன்பறிப்பு செய்யப்பட்ட தமிழர் நிலங்களும், நில விடுவிப்பு தொடர்பான போலியான அரசின் அறிவிப்புகளும்.
3)சிறிலங்காவின் தற்போதைய பொருளாதார நிலவரம்.
4)சிறிலங்காவில் தற்போதய மனிவுரிமை சார்ந்த தகவல்களும் நிலவரமும்.
5)போருக்கு பின்னரான மக்களின் வாழ்க்கை நிலைமை.

போன்ற விடயங்கள் கலந்துரையாடப் பட்டன. சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழினப் படுகொலைக்கான பொறுப்புக்கூறலின் முக்கியத்துவத்துவம் வலியுறுத்தப்பட்டது. சிறிலங்காவின் அண்மைக்கால மனிதவுரிமை தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது நீதிவழங்கல் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் இலங்கை அரசு குறிப்பிடக்கூடிய நடவடிக்கைகளெதையும் எடுக்கவில்லை என்பதுவும் சுட்டிக்காட்டப்பட்டது.

பொறுப்புக்கூறலுக்கான அனைத்துலக சுயாதீன பொறிமுறைகள் தேவையென வலியுறுத்தப்பட்டது.

மேலும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் பெண்கள் தலைமையில் நடைபெற்று வரும் போராட்டம் பற்றியும், சிறிலங்காவில் அமைந்துள்ள இதற்கான அலுவலகம்(OMP) செயற்திறனற்றதாக. நடவடிக்கை எதையும் எடுக்காதது குறித்தும் வலியுறுத்தப்பட்டது. வெளியுறவுத்துறை அமைச்சர் குறிப்பிடுகையில் ஐ,நாவின் மனிவுரிமை கூட்டத் தொடர் தொடர்பாகவும், பின்லாந்து அரசு மிகவும் நெருக்கமாக தமிழர்கள் சார்ந்த விடயங்களை அவதானித்து வருவதாகவும், பின்லாந்தில் வதியும் தமிழ்ச் சமுகத்தினர் மிகுந்த வினைத்திறன் உள்ளவர்களாக வாழ்கிறார்கள் என்பதையும் அவர் குறிப்பிட்டுப் பாராட்டினார். தங்களால் முடிந்தளவு பரிந்துரைகளை ஜெனிவாவில் பிரயோகிப்பதாக அமைச்சர் கூறினார். அண்மைக்காலமாக தமிழர்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பாகவும், மனிதவுரிமை சார்ந்த விடயங்கள் தொடர்பாகவும் பின்லாந்து அரசு மிகுந்த அக்கறை காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.