திட்டமிட்ட வகையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பை நடத்துவதில் பாதிப்பு

264 0

அரசாங்கத் தரப்பில் இருந்து நிதி மற்றும் ஏனைய தேவைகளை வழங்குவதில் தாமதம் காணப்படுவதால் திட்டமிட்ட வகையில் எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பை நடத்துவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றம் 23 ஆம் திகதி  வியாழக்கிழமை ஒரு உறுதியான தீர்மானத்தை அறிவிக்கும் என எதிர்பார்கிறோம். உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை முழுமையாக செயற்படுத்துவோம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான நடவடிக்கைகளை செல்லுபடியற்றதாக்குமாறு உத்தரவிடக் கோரி ஓய்வு பெற்ற இராணுவ கேர்ணல் டபிள்யூ.எம்,ஆர்.விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தபால்மூல வாக்கெடுப்புக்கு முன்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மனுதாரர் உயர்நீதிமன்றத்திற்கு தாக்கல் செய்த நகர்த்தல் பத்திரம் நேற்று திங்கட்கிழமை காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

தேர்தல் நடவடிக்கைளை மேற்கொள்ளதற்கான நிதியை விடுவிப்பதில் திறைச்சேரி தாமதப்படுத்தியது அத்துடன் ஏனைய தரப்பினரிடமிருந்து போதுமான ஒத்துழைப்பு கிடைக்கப் பெறவில்லை.

நிதி நெருக்கடியினால் வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால் தபால் மூல வாக்கெடுப்பு பிற்போடப்பட்டுள்ளன இவ்வாறான பின்னணியில் திட்டமிட்ட வகையில் மார்ச் மாதம் 09 ஆம் திகதி உள்ளுராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பை நடத்துவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

தேர்தலை பிற்போடுமாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு நாளை மறுதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இதன் போது உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றம் உறுதியான தீர்மானத்தை அறிவிக்கும்.உயர்நீதிமன்றம் அறிவிக்கும் தீர்மானத்தை முழுமையாக செயற்படுத்துவோம் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகள் கடந்த திங்கட்கிழமை 13 ஆம்;; திகதி இடைநிறுத்தப்பட்டதை தொடர்ந்து உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

இதனால் வியாழக்கிழமை,எதிர்வரும் 24 மற்றும் 28 ஆகிய தினங்களில் இடம்பெறவிருந்த தபால் மூல வாக்கெடுப்பு மறு அறிவித்தல் விடுக்கும் வரை பிற்போடப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 09 ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாமல் போனால் 340 உள்ளுராட்சி அதிகார சபைகளை அரசாங்கத்தின் விசேட ஆணையாளரின் கீழ் கொண்டு வர பொது நிர்வாகம் மற்றும் நிர்வாக சேவைகள் அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.