உருத்திரபுரம் கொலைச் சம்பவத்தோடு தொடர்புடைய மூன்றாவது நபர் கைது

150 0

கிளிநொச்சி, உருத்திரபுரம் பகுதியில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் நேற்று (18) கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி, உருத்திரபுரத்தில் உள்ள சிவநகர் பகுதியில் கடந்த 13ஆம் திகதி மரண வீடொன்றில் இடம்பெற்ற கருத்து முரண்பாட்டையடுத்து, இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் வாள் வெட்டில் முடிந்தது.

இதில் சிவநகர் பகுதியை சேர்ந்த 44 வயதுடைய சண்முகசுந்தரம் யசோதரன் என்ற நான்கு  பிள்ளைகளின் தந்தை உயிரிழந்ததுடன், நான்கு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் முன்னதாக கைதுசெய்யப்பட்டு, எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மேலும் ஒரு சந்தேக நபர் கிளிநொச்சி பொலிஸாரால் நேற்று கைதுசெய்யப்பட்டு இன்று (19) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில்  முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, நீதிமன்றம் மேற்படி சந்தேக நபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளையிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.