தமிழகத்தில் 9 முதல் 14 வயது வரையுள்ள சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்க நடவடிக்கை

69 0

 தமிழகத்தில் 9 முதல் 14 வயது வரை உள்ள சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசிகளை பள்ளிகள், அங்கன்வாடி மையங்களிலேயே வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலக அளவில் மார்பக புற்றுநோய்க்கு அடுத்தபடியாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்குதான் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். உலக அளவில் அத்தகைய தாக்கத்துக்கு உள்ளாகும் பெண்களில் 25 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை பொருத்தவரை ஆண்டுதோறும் 80 ஆயிரம் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய்பாதிப்பு ஏற்படுவதாகத் தரவுகள்தெரிவிக்கின்றன. இதையடுத்து பெண்களுக்கு வளரிளம் பருவத்திலேயே, தடுப்பூசியை செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்த முடிவு செய்தது.

அதன்படி, ஹெச்பிவி எனப்படும் அந்த தடுப்பூசியை முதல்கட்டமாக தமிழகம், கர்நாடகம், மிசோரம், சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அத்திட்டத்தை செயல்படுத்த ஆயத்தநிலையில் இருப்பதாக தமிழக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் 9 வயது முதல் 14 வயது வரை உள்ள பள்ளி மாணவிகளின் விவரங்களை திரட்டி வருகிறோம். சம்பந்தப்பட்ட பள்ளிகளிலும் இதுகுறித்த தகவல்களை கேட்டிருக்கிறோம். மத்திய அரசு சார்பில் தடுப்பூசிகள் வழங்கப்பட்ட பின்னர், அதனை முறையாக குளிர்ப்பதன முறையில் பாதுகாத்து பயனாளிகளுக்கு அவர்களது பள்ளிகள், அங்கன்வாடி மையங்களிலேயே வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது இந்த திட்டம் ஆரம்ப நிலையில் இருப்பதால் அதற்கான வழிகாட்டுதல்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை. விரைவில் அதுகுறித்த விரிவான அறிவுறுத்தல்கள் மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு வழங்கப்படும். தடுப்பூசி திட்டங்களை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்துவதற்குத் தேவையான எண்ணிக்கையில் சுகாதாரப் பணியாளர்கள் தமிழகத்தில் உள்ளனர்.

கரோனா தடுப்பூசி, தேசிய தடுப்பூசி திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதைப் போலவே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டத்தையும் நடைமுறைப்படுத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.