தொழிலை இராஜினாமா செய்யாது வேட்புமனு தாக்கல் செய்த அதிபர் பணி இடைநிறுத்தம்!

73 0

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி அநுராதபுரம் மாநகர சபைக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள அநுராதபுரம் நகரிலுள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவருக்கு பணிபுரிய வடமத்திய மாகாண கல்வி திணைக்களம் தடை விதித்துள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்ப்பித்தமைக்காக குறித்த அதிபர் தனது பதவியை இராஜினாமா செய்யாமை காரணமாகவே  அவர் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முறைப்பாட்டை  ஆராய்ந்த வடமத்திய மாகாண கல்வி திணைக்களம், குறித்த அதிபரின் சேவையை உடனடியாக அமுலுக்குவரும் வகையில் இடைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

தேர்தல் சட்டத்தின்படி, அரச துறையில் பணியாளர் தரநிலையில் கடமையாற்றும்  அதிகாரி ஒருவர் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டால், அவர் வேட்புமனுவைச் சமர்ப்பிப்பதற்கு முன்னர் தனது  பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்.