சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மந்திரவாதி

107 0

காலி, ஓபாத பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் அறையொன்றில் 8 நாட்களாக பன்னிரெண்டு வயது சிறுமியை வன்புணர்வு செய்ததாக கூறப்படும்  மந்திரவாதி ஒருவரைக்  கைது செய்வதற்கான விசாரணைகளை ஓபாத பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி  வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்டபோது  சிறுமியை பரிசோதித்த வைத்தியர், அவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,  தனது 12 வயது மகளுக்கு கடவுளின் ஆசி வழங்குவதற்காக  சிறுமியின் தந்தை  தமது வீட்டுக்கு மந்திரவாதி ஒருவரை அழைத்து வந்துள்ளார்.

இதன்போது குறித்த மந்திரவாதி  8  நாட்களுக்கு   பூஜை செய்தால்  கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்று  கூறியுள்ளார்.

இதனையடுத்து குறித்த சிறுமியை 8 நாட்களும் அந்த மந்திரவாதி வீட்டின் அறை  ஒன்றில் வைத்து  பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.