பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மரணம்

91 0

 பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். அவருக்கு வயது 79.

பர்வேஸ் முஷாரப் நீண்ட நாட்களாக அமிலாய்டோசிஸ் நோயினால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி முஷாரப் இறந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முஷாரப் இறப்பு குறித்து தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சித் தலைவர் ஃபகத் உசைன் கூறும்போது, “பர்வேஸ் முஷாரப் காலமானார், அவர் ஒரு சிறந்த மனிதர், அவரது சிந்தனையில் பாகிஸ்தானே முதலில் இருந்தது. கடவுள் அவர் மீது கருணை காட்டட்டும்” என்றார். முன்னதாக கடந்த ஆண்டு ஜூன் மாதமே முஷாரப்பின் உடல்நிலை மோசமடைந்து இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

பர்வேஸ் முஷாரப் பாகிஸ்தானின் அதிபராக இருந்த காலத்தில், அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக, 2007-ஆம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி அவசர நிலையை பிரகடனம் செய்தார். மேலும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் அவர் சிறையில் அடைத்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து அவர் மீது 2013-ஆம் ஆண்டு டிசம்பரில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக எனக் கூறி, பாகிஸ்தானிலிருந்து முஷாரப் வெளியேறி துபாய் சென்றுவிட்டார். பின்னர் அங்கேயே அவர் தங்கிவிட்டார். முன்னதாக தேசத் துரோக வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முஷாரப்புக்கு சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனையை அறிவித்தது. அதனை எதிர்த்து தொடுக்கப்பட்ட சீராய்வு மனுவை விசாரித்த லாகூர் உயர் நீதிமன்றம், பர்வேஸ் முஷாரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கை எதிர்த்து முஷாரப் மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் சூழலில் முஷாரப் உடல்நிலை மோசமாகி துபாயில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் உயிரிழந்திருக்கிறார்.