கோடீஸ்வர வர்த்தகர் கொலை – தம்பதியினர் கைது!

129 0

பெலவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டின் நீச்சல் தடாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த கோடீஸ்வர வர்த்தகரின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களான தம்பதியினரை பொலிஸார் இன்று (05) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நாட்டை விட்டு வௌியேறியதாக முன்னர் சந்தேகிக்கப்பட்ட நிலையில் பின்னர் அவர்களின் வெளிநாடு செல்வதற்கான முயற்சி தோல்வியடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

வர்த்தகரின் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த கணவனும் மனைவியும் கடவத்தையில் உள்ள பிரபல ஆடையகத்திற்கு முன்பாக கைது செய்யப்பட்டதாக கந்தானை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் காமினி ஹேவாவிதாரண தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட தம்பதியினர் கொத்தடுவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் 23 மற்றும் 27 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, குறித்த கொலை சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கந்தானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

27 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 02 ஆம் திகதி பத்தரமுல்லை பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து வீட்டின் உரிமையாளரான வர்த்தகர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

உயிரிழந்தவர் பிரபல ஆடையகம் ஒன்றின் உரிமையாளராவார்.

குறித்த தொழிலதிபர் கடந்த மாதம் 31 ஆம் திகதி அந்த வீட்டிற்கு செல்வதாக தனது சகோதரியிடம் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனால் அவர் மீண்டும் திரும்பாததால் விசாரணையில் அவரது உடல் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மரணத்துக்கான சரியான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.