பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் ரஷ்யர்கள் பங்குபற்றுவதை 40 நாடுகள் எதிர்க்கலாம் என போலந்து எதிர்வுகூறல்

129 0

பாரிஸ் 2024 ஓலிம்பிக் விளையாட்டு விழாவில் ரஷ்யர்களுக்கு பங்குபற்ற அனுமதி வழங்கப்படுமாயின் அதனை 40 நாடுகள் எதிர்ப்பதுடன் அவை ஒலிம்பிக் விளையாட்டு விழாவை பகிஷ்கரிக்கக்கூடும் என போலந்து எதிர்பார்க்கிறது.

ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளின் விளையாட்டு வீரர்களை பாரிஸ் 2024 ஓலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றச் செய்தால் பல நாடுகள் அதனை எதிர்க்கும் என எதிர்பார்ப்பதாக போலந்து விளையாட்டுத்துறை அமைச்சர் காமில் போர்ட்னிக்ஸுக் தெரிவித்தார்.

‘அடுத்த வாரம் 40 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கூடி இந்த விடயம் தொடர்பாக ஓர் உறுதியான முடிவை எடுக்கும் என கருதுகிறேன்’ என தேசிய தொலைக்காட்சி சேவைக்கு அவர் கூறியுள்ளார்.

‘ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ரஷ்யர்களும் பெலாரஷ்யர்களும்  பங்குபற்றுவதை   இந்த நாடுகள் ஆணித்தரமாக எதிர்க்கும்’ என அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் பிர்த்தானியாவும் இந்த எதிர்ப்பில் கலந்துகொள்ளும் என நம்புவதாக அவர் கூறினார்.

ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளின் விளையாட்டு வீரர்களை நடுநிலையாக பங்குபற்றுவதற்கு அனுமதிப்பதாக வியாழனன்று வெள்ளை மாளிகை தெரிவித்தது. ஆனால், ஐக்கிய அமெரிக்கா அதற்கு உடன்படாது என கருதுவதாக போர்ட்னிக்ஸுக் தெரிவித்தார்.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடர்பாக ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் பெப்ரவரி 10ஆம் திகதி வீடியோ அழைப்பு மூலம் கலந்துரையாடவுள்ளனர்.

தமது நாட்டின் மீது  ரஷ்யா  தொடுத்த மிலேச்சத்தனமான போர் காரணமாக ரஷ்யாவையும் பெலாரஸையும் முழமையாக தடைசெய்ய வேண்டும் என யுக்ரெய்ன் வலியுறுத்தி வருகிறது. இந்தப் போரினால் தமது விளையாட்டு வீரர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும் யுக்ரெய்ன் சுட்டிக்காட்டியது.

இதேவேளை, ஒலிம்பிக் அரசியல் மயமாக்கப்படக்கூடாது என குறிப்பிட்டுள்ள ரஷ்யா, தமது நாட்டின் மீதான சகல கட்டுப்பாடுகளையும் நீக்கவேண்டும் எனவும் கோரியுள்ளது.

ரஷ்யர்களை நடுநிலையான போட்டியாளர்களாக ஒலிம்பிக்கில் பங்குபற்றச் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்ந்துவருவதாக சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) தெரிவித்துள்ளது.