சேலத்தில் பறவைகளின் புகலிடமாக மாறிய மணிவிழுந்தான் ஏரி

71 0

 சேலம் மாவட்டத்தில் பறவைகளின் புகலிடமாக மாறியுள்ள மணிவிழுந்தான் ஏரியில் 124 வகையான பறவை இனங்கள் உறைவிடமாக கண்டறிந்து, சேலம் பறவையியல் கழகம் பதிவு செய்துள்ளது.

சேலம் மாவட்டம், தலைவாசலில் அமைந்துள்ள மணிவிழுந்தான் ஏரியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பறவை இனங்கள் வருகை அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை தப்பாமல் பெய்து வருவதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி காணப்படுகிறது. அதேபோல, சேலம் மாவட்டத்தில் 50 சதவீதத்துக்கும் அதிகமான ஏரிகளில் நீர்த்தேக்க பகுதியாக மாறியுள்ளது. மணிவிழுந்தான் ஏரியில் நீர் ததும்பிட, இயற்கை எழில் சூழ, மாசுபாடற்ற பகுதியாக மாறியுள்ளதன் காரணமாக பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு பகுதியாக பறவையினங்களின் வரத்தும், அவைகளின் உறைவிடமாக மாறியுள்ளது.

நீலவால் பஞ்சுருட்டான்

இதற்கு முக்கிய காரணமாக அக்சென் ஃபவுண்டேஷன் மற்றும் மணித்துளி சுற்றுச்சூழல் மேம்பாட்டு இயக்கத்தினர் மணிவிழுந்தான் ஏரியில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி, அங்கே சிறிய மண் திட்டுகள் அமைத்து, மண்ணுக்கு உகந்த மரங்களை நட்டு ஏரி மீட்டுருவாக்கப் பணிகள் செய்துள்ளதால், தற்போது பறவைகளின் புகலிடமாக மாறியுள்ளது. மணிவிழுந்தான் ஏரியில் மட்டும் உள்நாட்டு, அயல் நாட்டு பறவைகள் உட்பட 124 வகையான பறவைகளுக்குப் புகலிடமாக மாறியுள்ளது, சேலம் பறவையியல் கழகம் ஆய்வில் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் “ஈ-பேர்டு” என்ற சர்வதேச தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து பறவையியல் கழக இயக்குநர் கணேஷ்வர் கூறியது, “மணிவிழுந்தான் ஏரியின் மீட்டுருவாக்கப் பணிகள் அறிவியல் பூர்வமாக பல கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. ஏரிக்கு வரும் ஒவ்வொரு பறவை இனத்தின் தேவையையும் கருத்தில் கொண்டு இப்பணிகள் நடைபெறுகின்றன. உதாரணமாக ஏரியின் தண்ணீர் குறையத் துவங்கும் போது பல இடங்களில் அது தாழ்வான சேற்றுப் பகுதிகளுக்கு வழி செய்கிறது.

பட்டாணி உப்புக்கொத்தி

இதுபோன்ற கரையோர சேற்றுப் பகுதிகள் தான் மண்கொத்தி, பொரி மண்கொத்தி, போன்ற வெளிநாட்டுப் பறவைகள் மற்றும் பட்டாணி உப்புக்கொத்தி, பவளக்கால் உள்ளான், ஆள்காட்டி, கதிர்க்குருவிகள், சின்னக் கீச்சான், நீலவால் பஞ்சுருட்டான் போன்ற உள்நாட்டு கரையோரப் பறவைகள் மணிவிழுந்தான் ஏரியில் தென்படுகிறது. ஏரியின் உள்கட்டமைப்பு பகுதிகள் ஆழப்படுத்தப்படாமல் இருப்பதே, பறவையினங்கள் வருகை அதிகரிக்க காரணமாக உள்ளது. கடந்த பல ஆண்டுகளை காட்டிலும், தற்போது தான், மணிவிழுந்தான் ஏரிக்கு 124 வகையான பறவையினங்கள் வந்துள்ளது.

சின்னக் கீச்சான்

இயற்கை சூழல் அழிவின்மைக்கான முதற்படியாக கொண்டுள்ளது. இப்பறவைகளின் வருகைக்கு காரணம், அடர்ந்து வளர்ந்துள்ள மரங்கள் மற்றும் புதர் நிறைந்த பகுதிகள் பறவையினங்களுக்கு ஏற்ற சூழலை மணிவிழுந்தான் ஏரி கொண்டுள்ளதால் என கூறலாம். அதிகாலை முதல் நள்ளிரவு வரையில் ஏரியில் முகாமிட்டு, ஒளிப்படக் கலைஞர் காசி விஸ்வநாதன் மற்றும் குழுவினர் தொடர்ந்து பறவைகளின் வருகை குறித்தும், வாழ்வியல் இயக்க தகவல்களை ஒளிபடத்தின் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. மணிவிழுந்தான் ஏரியில் பறவையினங்கள் வருகை அதிகரிக்கும்பட்சத்தில், சேலத்தில் ஒரு குட்டி வேடந்தாங்கலை மக்கள் கண்டு ரசிக்கும் வாய்ப்பு பெறவுள்ளது” அவர் கூறினார்.