மன்னாரில் இராணுவத்தினரால் நிறுத்தப்பட்ட சிறு கடற்தொழிலுக்கு மீண்டும் அனுமதி

115 0

நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் தலையிட்டால் சிறு கடல் தொழில் செய்யும் மீனவர்களுக்கு மீண்டும் தள்ளாடி 14 கண் பாலத்தடியில் கடற்தொழில் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மன்னார்-யாழ் பிரதான வீதி தள்ளாடி 14 கண் பாலத்தடியில் வாழ்வாதாரத்துக்காக நீண்ட காலங்களாக சிறு கடல் தொழில் செய்யும் மீனவர்களை இராணுவம் அப்பகுதியில் தொழில் செய்ய அனுமதிக்காததன் காரணமாக அப்பகுதி மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளார்கள்.

பாதிக்கப்பட்ட மீனவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலாதனின் கவனத்திற்கு இதனைக் கொண்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த பகுதிக்கு நேற்று திங்கட்கிழமை (30.01.2023) மாலை நேரடியாக சென்று மீனவர்களின் நிலைமை தொடர்பாக ஆராய்ந்ததுடன் வன்னி இராணுவ தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு இப்பிரச்சனை தொடர்பாக தெரியப்படுத்தியுள்ளார்.

உடனடியாக தள்ளாடி இராணுவ பொறுப்பு அதிகாரி சம்பவ இடத்திற்கு வருகை தந்து, நாடாளுமன்ற உறுப்பினருடன் கலந்துரையாடிய தன் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினரின் வேண்டுகோளுக்கு அமைவாக மீனவர்கள் தொடர்ந்தும் அப்பகுதியில் சிறு கடல் தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இப்பாலத்தடியில் நாகதாழ்வு, பெரிய நாவற்குளம், மாந்தை மற்றும் திருக்கேதீஸ்வரம் போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் வாழ்வாதாரத்தை மையமாகக் கொண்டு சிறு கடற்றொழில் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.