சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிற்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (26) நிதியமைச்சில் இடம்பெற்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுக்குப் பொறுப்பான நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியம் உள்ளிட்ட பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி, இலங்கைக்கு ஆதரவை தெரிவித்து, சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான நிதி வசதிக்கான முதல் தவணையை இலங்கை விரைவில் பெறும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் அரச வருமானம் மற்றும் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், கடன் தவணைகளை பெற்றுக்கொள்வது தொடர்பான தொழில்நுட்ப விடயங்கள் தொடர்பிலும் வெற்றிகரமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பெறுபேறுகளின் அடிப்படையில் இலங்கைக்கு அதன் நிதி வசதிகள் கிடைக்கும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.