யாழில் வர்த்தகரை வாளால் வெட்டிவிட்டு 5 இலட்சம் ரூபா கொள்ளை

95 0

முகத்தை மறைத்து கடைக்குள் நுழைந்தவர்கள் வர்த்தகரை வாளால் வெட்டி காயப்படுத்தி விட்டு 5 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு 10 மணியளவில் கல்வியங்காடு – செங்குந்த பொதுச் சந்தை கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது.

வர்த்தக நிலையத்தின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் அதன் உரிமையாளர் ஆறுமுகம் கேசவன் என்பவரே காயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

நேற்று முன்தினம் இரவு இலக்கம் மறைக்கப்ட்ட மூன்று மோட்டார் சைக்கள்களில் முகத்தை மறைத்தவாறு வந்த குழு ஒன்று போத்தல்கள் மற்றும் மரக்கட்டைகளால் வர்த்தக நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியது.

தொடர்ந்து கடைக்குள் நுழைந்த குழு உரிமையாளரை தாக்கிவிட்டு 5 இலட்சம் ரூபாவை கொள்ளை அடித்து விட்டு தப்பிச் சென்றது. இந்தச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காயமடைந்த கடை உரிமையாளர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.