வசந்த கரன்னாகொட குழுவினரின் அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்காதது ஏன்?

68 0

மே 09 ஆம் திகதி காலிமுகத்திடல் போராட்ட களம் மீதான தாக்குதல் மற்றும் அதனை தொடர்ந்து நாட்டில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவினர் சமர்ப்பித்த அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஏன் இதுவரை அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கவில்லை என எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சியின் சுயாதீன உறுப்பினர்கள் ஆளும் தரப்பின் பிரதம கோலாசான் பிரசன்ன ரணதுங்கவிடம் கேள்வி எழுப்பினர்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற அமர்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மே 09 ஆம் திகதி காலி முகத்திடல் போராட்டக்களம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் அன்றைய தினம் நாட்டின் முழு பாகங்களிலும் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட தலைமையில் ஐவர் அடங்கிய குழுவை நியமித்தார்.

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட தலைமையிலான குழுவினர் மே 09,அதனை தொடர்ந்து இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.

இந்த அறிக்கையின் உண்மை விபரத்தை நாட்டு மக்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும், ஆகவே அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்திடமும், ஜனாதிபதியிடமும் பலமுறை வலியுறுத்தினோம்,ஆனால் இதுவரை அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே மே 09 ஆம் திகதி காலிமுகத்திடல் போராட்டகளம் மீதான தாக்குதல் மற்றும் நாட்டில் இடம்பெற்ற வன்முறை தொடர்பில் ஆராய்ந்த குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் உள்ளது.

அந்த அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 115 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் எழுத்து பூர்மாக கோரிக்கை விடுத்தோம், ஆனால் இதுவரை அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவில்லை என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச,மதுர விதான முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளித்த ஆளும் தரப்பின் பிரதம கோலாசான் பிரசன்ன ரணதுங்க மே 09 சம்பவம் தொடர்பான அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அவதானம் செலுத்தியுள்ளோம்,வெகுவிரைவில் அறிக்கையை சபைக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.