நோர்வூட் பிரதேசசபையின் அரச உத்தியோகத்தர்களை அச்சுறுத்திய நபரை கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

199 0

நோர்வூட் பிரதேச சபையின் உத்தியோகத்தர்களின் சேவைக்கு இடையூறினை ஏற்படுத்தி உத்தியோகத்தர்களை அச்சுறுத்திய நபரை கைது செய்யும்மாறு கோரி இன்று (ஜன 13) காலை நோர்வூட் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் பணிபகிஷ்கரிப்பபில் ஈடுபட்டதோடு நோர்வூட் பிரதேசசபை முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டமானது இன்று வெள்ளிக்கிழமை காலை 08.30 மணியில் இருந்து காலை 11.00 மணிவரை  முன்னெடுக்கப்பட்டது. இதன்போது உள்ளூராட்சி சட்டங்களை மதிக்க தெரிந்துக்கொள், அரச உத்தியோகத்தர்களை அச்சுறுத்தியவர்களை கைது செய், சட்டத்தை நிலைநாட்டு, பாதுகாப்பு தரப்பே அரசியலுக்கு அடிபணியாதே போன்ற கோஷங்களையும் பாதாதைகளையும் ஏந்தி ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.

 

இம் மாதம் 11ம் திகதி செவ்வாய்கிழமை புளியாவத்தை பகுதியில் உள்ள கோழி இறைச்சி கடை ஒன்று அனுமதி பத்திரம் பெறாது கோழி இறைச்சிகளை விற்பனை செய்வதை அறிந்து சென்ற நோர்வூட் பிரதேசசபை உத்தியோகத்தர்களை அந்த பகுதியில் உள்ள நபர் ஒருவரினால் அச்சுறுத்தப்பட்டு தகாத வார்தைகளை பயன்படுத்தி  சேவைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் நோர்வூட் பிரதேசசபையின் செயலாளரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  செய்யப்பட்டது.

இரண்டு நாட்கள் கடந்துள்ள நிலையில் சம்பந்தப்பட்ட நபர் இதுவரையிலும் கைது செய்யப்படவில்லை. எம்மை அச்சுறுத்திய நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும்  என வலியுறுத்தியும் தமக்கு பாதுகாப்பு வேண்டுமென கோரியும் இது தொடர்பாக நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கொவல்தெனியவை தொடர்பு கொண்டு வினவியபோது  குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.