ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழுவின் செயலாளராக ஏ.சி.சமால்தீன் தெரிவு

128 0

2023 உள்ளூராட்சி மன்ற தேர்த‌ல் நடவடிக்கைக்காக  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழுவின் செயலாளராக கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.சி.சமால்தீன் தெரிவாகியுள்ளார்.

 

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழு மருதமுனை பொது நூலக கேட்போர் கூடத்தில் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற போது குறித்த நியமனம் தொடர்பில் அறிவிக்கப்பட்டது.

 

மேலும் முஸ்லிம் காங்கிரஸின் மாவட்டச் செயற்குழுக்கூட்டத்தில்  கட்சியின் தற்போதைய நடவடிக்கைகள் சம்பந்தமாகவும், எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு தேர்தலில் களம் காண்பது பற்றியும் எதிர்கால கட்சியின் செயற்றிட்டங்கள் பற்றியும் தெளிவாக கலந்தலோசிக்கப்பட்டது.

அத்துடன் குறித்த கூட்டத்தில் பகிரங்கமாக எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து தனது மரச்சின்னத்தில் போட்டியிடும் என்பதுடன் வட்டார கிளை அமைக்காத எவருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் அந்தஸ்த்தை வழங்காது  என கட்சியின் தலைவர் பகிரங்கமாக அறிவிப்புச் செய்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம் ஹரீஸ், பைசால் காசிம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம் மன்சூர், அலி சாஹீர் மெளலானா, கட்சியின் தவிசாளர் ஏ.எல்.அப்துல் மஜீட், செயளாலர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர் கட்சியின் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் குறித்த கூட்டமானது இரவு வரை நீடித்ததுடன் இம்முறை 2023 உள்ளூராட்சி மன்ற தேர்த‌லில் புதிய வியூகத்துடன் போட்டியிட கட்சியினர் ஒத்துழைப்புகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.