ஜனநாயக விரோத நடவடிக்கையில் பல கட்சிகள்

171 0

குறுகிய அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக பல்வேறு கட்சிகள் தேர்தலை ஒத்திவைக்கும் கொடூரமான ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

எனினும் மக்களின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் பாரபட்சமான கருத்துக்களை ஒருபோதும் ஊக்குவிக்கப் போவதில்லை என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் கூட்டாக அறிவித்துள்ளன.

அத்தோடு மக்களின் நம்பிக்கையிலேயே எந்தவொரு அரசாங்கத்தினதும் நிலையான இருப்பு தங்கியுள்ளது. அந்த வகையில் தேர்தல் செலவுகள் எதிர்கால முதலீடு என்று உறுதியாக நம்புவதாகவும் அந்த அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு (பெப்ரல்), தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம், டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா , சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான அமைப்பு (கபே), தேர்தல் கண்காணிப்பு மையம் மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் ஆய்வுகளுக்கான நிறுவனம் உள்ளிட்ட அமைப்புக்கள் கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளன.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

வேட்புமனுக்கள் ஏற்கப்படும் திகதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளாட்சி மன்றத் தேர்தலை மிக விரைவில் நடத்த தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், உண்மையில் தேர்தல் நடைபெறுமா என்பது நிச்சயமற்றதாகவுள்ளது. ஏனெனில் பல்வேறு பொறுப்பு வாய்ந்த கட்சிகள் தேர்தலை மேலும் ஒத்திவைப்பதற்கான உத்திகள் தொடர்பில் அவதானம் செலுத்தி வருகின்றன.

அத்தோடு, நாட்டில் செயற்பட்டு வரும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக ஒரு நிலைப்பாட்டை உருவாக்க சிலர் முயற்சிப்பதாகத் தெரிகிறது. அவ்வாறான முயற்சிகள் தொடர்பில்  தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் பொதுவான கருத்தை வெளிப்படுத்த விரும்புகின்றன.

ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளின் அடிப்படையில் தேர்தல்களை நடத்துவதில் சிறந்த சாதனை படைத்த ஒரு நாடாக இலங்கை காணப்படுகிறது. எந்தவொரு ஜனநாயக அரசாங்கத்தின் இருப்பும் முறையாக நடத்தப்படும் உண்மையான தேர்தல்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது. எனவே, நாட்டில் செயற்படும் எந்தவொரு தேர்தல் கண்காணிப்பு அமைப்பும் எந்தவொரு தேர்தலையும் தாமதப்படுத்துமாறு என்றும் கோரியதில்லை என்பதை நாம் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

உரிய சட்ட நடைமுறைகளை மீறி அரசியல் சாசனத்திற்கு முரணாக தேர்தல் நடத்தப்படும் போது மாத்திரமே அது குறித்து தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் கேள்வி எழுப்புகின்றன. ஆனால் இவ்வருடம் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அவ்வாறானதொரு பிரச்சினை தோன்றாது என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

தேர்தலை நடத்தும் போது கருத்தில் கொள்ள வேண்டிய தொழில்நுட்ப மற்றும் சட்ட விடயங்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழு சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். இதன் போது ஏதேனும் சிக்கல்கள் காணப்பட்டால் பாராளுமன்றம் அதன் பெரும்பான்மை இணக்கப்பாட்டின் கீழ்  பொதுவான முடிவுகளை எடுக்க முடியும்.

மற்றொரு நடைமுறை நீதிமன்றத்தை நாடுவதாகும். எனவே, இந்தப் பின்னணியில்தான் நாம் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளாகச் செயல்படுகிறோம். தங்களது குறுகிய அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய பல்வேறு கட்சிகள் தேர்தலை ஒத்திவைக்கும் கொடூரமான ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், மக்களின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் பாரபட்சமான கருத்துக்களை நாங்கள் ஒருபோதும் ஊக்குவிக்க மாட்டோம்.

நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை நாம் நன்கு அறிவோம். இந்த மாபெரும் பொருளாதார வீழ்ச்சிக்கு நாட்டை இட்டுச் சென்ற தலைவர்கள் அந்தந்த அரசாங்கங்களை வழிநடத்திய அரசியல் அதிகாரிகளே. எந்த ஒரு அரசின் நிலையான இருப்பும் மக்களின் நம்பிக்கையில் மாத்திரமே தங்கியுள்ளது. அத்தகைய அமைப்பில் தேர்தல் செலவுகள் எதிர்கால முதலீடு என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

தேர்தலை நடத்தி அதன்மூலம் மக்கள் கருத்தை சோதித்து அதன்படி செயல்பட வேண்டியது நாட்டின் தற்காலிக பொறுப்பாளர்களாக இருக்கும் ஆட்சியாளர்களின் பொறுப்பு. அந்த அத்தியாவசியப் பணியை நிறைவேற்றாமல் நாட்டில் உயர் தேர்தல் கலாசாரத்தை உருவாக்குவதற்காக சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பரப்புவதால் நல்லதொரு அரசியல் கலாசாரம் நாட்டில் உருவாக்கப்படாது என்பதை உரிய தரப்பினர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.