அனைத்து மத ஸ்தலங்களுக்கும் சூரிய சக்தி கலன்கள்

314 0

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் அனைத்து மத தலங்களுக்கும் மூன்று மாத காலத்திற்குள் 05 கிலோவாட் சூரிய சக்தி கலன்கள் இலவசமாக வழங்கப்படும் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சில் செவ்வாய்க்கிழமை (டிச. 27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மின்கட்டண அதிகரிப்பால் பௌத்த விகாரைகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாகவும்,பௌத்த மத செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஒருசில பிக்குகள் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்கள்.

மின்கட்டண அதிகரிப்பில் எவ்வித வேறுபாடுகளும் பார்க்க முடியாது.மத தலங்கள் உட்பட அனைத்து கட்டமைப்புகளையும் உள்ளடக்கிய வகையில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மின்கட்டண அதிகரிப்பால் மத தலங்கள் மாத்திரமல்ல ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஒருபோதும் மறுக்கவில்லை.

மின்கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் மின்கட்டமைப்பை சீராக முன்னெடுத்துச் செல்ல முடியாது என்பதை விமர்சனங்களை முன்வைப்பவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.மின்கட்டண அதிகரிப்பில் இருந்து மீள வேண்டுமாயின் புதுப்பிக்கத்தக்க சக்தி வள பாவனை விரிவுபடுத்தப்பட வேண்டும்.

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் அனைத்து மத தலங்களுக்கும் 05 கிலோவாட் சூரிய சக்தி கலன்கள் இலவசமாக வழங்கப்படும்.இந்த செயற்திட்டம் இன்னும் மூன்று மாத காலத்திற்குள் செயற்படுத்தப்படும்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றதும் புதுப்பிக்கத்தக்க சக்தி வள பயன்பாட்டுக்கான உபகரணங்கள் குறைந்த வட்டி வீதத்தின் கடனடிப்படையில் விநியோகிக்கப்படும். எரிபொருள் மற்றும் நிலக்கரி ஊடாக மின்பாவனையை தவிர்த்து மாற்றுத் திட்டங்களை செயற்படுத்த விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.