மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தற்சார்பு பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும்

161 0

நாட்டில் ஒரு அரசாங்கத்தை உருவாக்கி விவசாயத்தில் கைவைத்தது மாத்திரமன்றி, ஒட்டுமொத்த மக்களின் பொருளாதாரத்தையும் இல்லாமல் செய்த பணியை அவர்களே ஆரம்பித்தனர்.

எனவே, எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தற்சார்பு பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டியுள்ளது என  நாடாளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் தெரிவித்தார்.

‘எமக்கான உணவை நாமே பயிரிடுவோம்; வீட்டுத் தோட்டங்களை உருவாக்குவோம்’ செயற்றிட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கனடா கிளையினது அனுசரணையுடன் நேற்று வெள்ளிக்கிழமை (டிச. 16) அம்பாறை ஆலையடிவேம்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெற்ற 100 பேருக்கு கத்தரி, மிளகாய் மற்றும் தென்னங்கன்றுகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு, கன்றுகளை வழங்கிவைத்து, உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

 

மக்களின் தேவைகளை அறிந்தவர்களாக இருந்தாலும், எங்களிடம் போதிய நிதி இல்லை. அரசாங்கத்தால் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு ஒதுக்கப்படும் நிதி கூட 2022ஆம் ஆண்டு ஒதுக்கப்படவில்லை. இருந்தபோதும் புலம்பெயர் சமூகத்தின் பங்களிப்புடன் சின்னச் சின்ன உதவித்திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறோம்.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல் மற்றும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் ஒட்டுமொத்தமாக பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதை நிவர்த்தி செய்ய வேண்டும்; புலம்பெயர் தேசத்திலுள்ள எமது உறவுகளின், மக்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த உதவிகளை செய்துள்ளனர். எனவே, முடிந்தவரை இதனை ஒரு வெற்றிகரமான செயற்றிட்டமாக மாற்றியமைக்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் சச்சிதானந்தம், பிரத்தியேக செயலாளர் கண்ணதாசன் மற்றும் பிரதேச கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டு பயிர்க்கன்றுகளை வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.