தட்சணாங்குளம் இந்து மயானத்தில், சந்தேகத்திற்கிடமான தடயப் பொருட்கள்…..(காணொளி)

265 0

வவுனியா தட்சணாங்குளம் இந்து மயானத்தில், சந்தேகத்திற்கிடமான தடயப் பொருட்கள் எதுவும் மீட்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா, பண்டாரிக்குளம், தட்சணாங்குளம் இந்து மயானத்தில் சந்தேகத்திற்கிடமான  பொருட்கள் புதைக்கப்பட்டு இருக்கின்றது என்ற சந்தேகத்தின் பேரில், வவுனியா நீதிமன்ற அனுமதியுடன் குறித்த பகுதி இன்று தோண்டப்பட்ட போதும் பொருட்கள் எவையும் மீட்கப்படவில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வவுனியா, பண்டாரிக்குளம், தட்சனாங்குளம் இந்து மயானத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சிலர் நடமாடியிருந்ததுடன், அங்கு மூன்று இடங்களில் குழிகள் வெட்டப்பட்டும் இருந்தன. அக்குழி ஒன்றின் அருகில் இராணுவத் தேவைக்கு பயன்படுத்தப்படும் உரைப்பை ஒன்றும் சிதைவடைந்த நிலையில் காணப்பட்டது.

இதனையடுத்து குறித்த மயானத்தில் விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் அல்லது நகைகள் இருக்கலாம் எனக் கருதி பொலிசார் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

மயானத்தைச் சுற்றி பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து வவுனியா நீதிமன்றின் அனுமதி பெற்று நீதிமன்ற உத்தியோகத்தர் என்.முருகதாஸ் முன்னிலையில், வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராசா, அப்பகுதி கிராம அலுவலர் உமாபதி, வவுனியா பொலிஸ் நிலை பதில் பொறுப்பதிகாரி, வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார், விசேட அதிரடிப்படையினர், தொல்பொருள் ஆராட்சியாளர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் குறித்த பகுதி கனகரக வாகனத்தின் உதவியுடன் தோண்டப்பட்டது.

இந்நிலையில், நீண்ட நேரமாக குழி தோண்டப்பட்ட போதும் அப்பகுதியில் இருந்து எவையும் மீட்கப்படவில்லை.

அதன் பின்னர் அக்குழிகள் மீண்டும் மூடப்பட்டன.

இதேவேளை, குறித்த சில தினங்களுக்கு முன்னர் அப்பகுதி தோண்டப்பட்டு அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் காணாமற்போயிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.