பஸ்ஸில் சக பயணி தொலைத்த தங்கச்சங்கிலியை கண்டுபிடித்துக்கொடுத்த நபரை கல்முனை பொலிஸ் தலைமையக பொலிஸார் பாராட்டியுள்ளனர்.
கல்முனை பஸ் நிலையத்திலிருந்து மட்டக்களப்பை நோக்கி சென்றுகொண்டிருந்த பஸ்ஸில் தவறவிடப்பட்ட சங்கிலியை பயணியொருவர் மீட்டு ஒப்படைத்துள்ளார்.
இந்த சங்கிலி செவ்வாய்கிழமை பொலிஸார் முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது,
கல்முனை பஸ் நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை (13) காலை மட்டக்களப்பு மாவட்டத்தை நோக்கி சென்ற களுவாஞ்சிக்குடி டிப்போவிற்கு சொந்தமான அரச பஸ் ஒன்றில் ஒலுவில் பகுதியைச் சேர்ந்த தாதிய மேற்பார்வை உத்தியோகத்தர் தனது மகளுடன் பயணம் செய்துள்ளார்.
இவ்வாறு பயணம் செய்த நிலையில் அதே பஸ்ஸில் பெரிய கல்லாறு பகுதியில் இருந்து காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி வங்கியில் கடமையாற்றும் மற்றுமொரு பயணியும் பயணித்துள்ள நிலையில் 2 பவுண் பெறுமதியான தங்க சங்கிலி அவரை அறியாமல் பஸ்ஸில் தவறி விழுந்துள்ளது.
இவ்வாறு தவறவிட்ட தங்க சங்கிலியை சக பயணியாக பயணித்த தாதிய மேற்பார்வை உத்தியோகத்தர் கண்டெடுத்து பஸ் நடத்துனருக்கு தெரியப்படுத்தியதுடன் உரிய நபரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.
இந்நிலையில் தனது கழுத்தில் இருந்த தங்க மாலை தவறவிடப்பட்டதை அறிந்த பயணி உடனடியாக அலுவலகத்தில் இருந்து தனது வீட்டிற்கு சென்று தொலைந்த தங்க மாலையை தேடியுள்ளார்.
பின்னர் மாலை அங்கும் கிடைக்காமையினால் உடனடியாக தான் பயணம் செய்த பஸ் நினைவுக்கு வரவே பஸ்ஸில் வழங்கப்பட்ட டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு குறித்த பஸ் நடத்துநரிடம் விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.
இதன்போது பஸ் நடத்துனரும் மாலை ஒன்று பஸ்ஸில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதை கண்டெடுத்தவர் உரியவரிடம் ஒப்படைக்க விரும்புவதாகவும் அவரை தொடர்பு கொண்டு உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கமைய தவறவிடப்பட்ட தங்க மாலையை கண்டெடுத்த தாதிய மேற்பார்வை உத்தியோகத்தரை தொடர்பு கொண்டு கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு சென்ற தங்க மாலையின் உரிமையாளரான பெண் பயணி தான் கொண்டு வந்த ஆதாரங்களை பொலிஸார் முன்னிலையில் சமர்ப்பித்துள்ளார்.
இதன் போது கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக வழிநடத்தலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் உள்ளிட்டோர் முன்னிலையில் தவறவிடப்பட்ட தங்க மாலை தொடர்பான ஆதாரங்கள் பரிசீலிக்கப்பட்ட பின்னர் சுமார் 3 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாக பெறுமதி கொண்ட தங்க சங்கிலி பொலிஸார் முன்னிலையில் உரிமையாளரான பெண் பயணியிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் பஸ்ஸில் தவறவிடப்பட்ட 2 பவுண் பெறுமதியான தங்க மாலையை பொலிஸார் முன்னிலையில் உரிமையாளிடம் ஒப்படைக்க முயற்சி செய்த தாதிய மேற்பார்வை உத்தியோகத்தரை கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி. எம். எல். புத்திக ,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர், குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் உள்ளிட்டோர் முன்னிலையில் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.