அமைச்சுப்பதவிகளை அதிகரிக்க அரசாங்கத்திற்கு இருக்கும் உரிமை என்ன ?

170 0

மக்கள் மீது வரி மற்றும் கட்டணங்களை அதிகரித்து, அரசாங்கம் அமைச்சுப் பதவிகளை மேலும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

இவ்வாறு செயற்படுவதற்கு அரசாங்கத்துக்கு இருக்கும் தார்மிக உரிமை என்ன? மக்கள் ஆணை இருக்கின்றதா என கேட்கின்றேன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (09) விசேட கூற்றொன்றை முன்வைத்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

யுனிசெப் அமைப்பு கடந்த ஜூன், ஒக்டோபர் மாதங்களுக்கிடையில் மேற்கொண்டுள்ள கணிப்பீட்டில் எமது நாட்டில் 62இலட்சம் பேர் உணவு பாதுகாப்பற்ற நிலைக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமல்லாது, 5குடும்ப உறுப்பினர்களை எடுத்துக்கொண்டால் அதில் இரண்டுபேர், அதாவது, நூற்றுக்கு 41,8பேர் தங்களின் வருமானத்தில் நூற்றுக்கு 75வீதம்  செலவிடுவது உணவு பொருட்களை கொள்வனவு செய்வதற்காகும்.

நாட்டில் இன்று சிறுவர் மந்தபோசணை, தாய்மார் மந்தபோசணை, தொழிலின்மை, வைத்தியவர்கள் உட்பட புத்திஜீவிகள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றமை போன்றன பாரிய பிரச்சினையாகி இருக்கின்றன.

இவ்வாறான நிலையில் மக்கள் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கையில்,  அரசாங்கம் மேலும் புதிய அமைச்சர்களை நியமிக்க முயற்சிக்கின்றது. இவ்வாறு அமைச்சர்களை நியமித்துக்கொள்ள அரசாங்கத்துக்கு இருக்கும் தார்மிக உரிமை என்ன?

வரவு செலவு திட்டம் மூலம் மக்களுக்கு பாரியளவில் வரி அதிகரிப்பு செய்து, கட்டண அதிகரிப்பு செய்து, மக்கள் மீது எரிவாயு, மின் கட்டணங்களை அதிகரித்து, அரசாங்கம் அமைச்சப்பதவிகளை வழங்கப்போகின்றது.

அதனால் இவ்வாறு அரசாங்கம் செயற்படுவதற்கு அரசாங்கத்துக்கு இருக்கும் மக்கள் ஆணை என்ன என கேட்கின்றேன் என்றார்.