சர்வதேசத்தின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் கடன் பிரச்சினைகள் உள்ளிட்ட விவகாரங்களில் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புக்களை தொடர்ந்தும் வலுப்படுத்துவதாக சீனா உள்ளிட்ட சர்வதேச நிதி மற்றும் பொருளாதார நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சீனாவின் பீஜிங் நகரில் கடந்த புதன்கிழமை (டிச. 7) ‘உலகளாவிய பொது அபிவிருத்திக்கான ஒத்துழைப்புக்கள்’ என்ற தொனிப்பொருளில் ஆரம்பமான மாநாட்டிலேயே சீனா இவ்வாறு உறுதியளித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கை கடனுதவியை பெற்றுக்கொள்ளவுள்ள விடயத்தோடு தொடர்புடைய முக்கியத்துவம் மிக்க மாநாடாக இது அமைந்துள்ளது.
அதற்கமைய நேற்று வியாழக்கிழமை (டிச. 8) சீன எக்சிம் வங்கி மற்றும் சீன அபிவிருத்தி வங்கி என்பவற்றின் தலைவர்கள் இணைந்து உலக வங்கி தலைவர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடியதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் டுவிட்டர் பதிவொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின்போது சர்வதேச பொருளாதார நிலைமை மற்றும் இலங்கை உட்பட அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் கடன் நெருக்கடி குறித்து நேர்மறையான அவதானம் செலுத்தப்பட்டது.
இதன்போது அனைத்து தரப்பினரும் எதிர்காலத்தில் இது போன்ற செயற்றிட்டங்களுக்கு தமது ஒத்துழைப்புக்களை முழுமையாக வழங்குவதாக குறிப்பிட்டனர்.
அத்தோடு சர்வதேச வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் கடன் பிரச்சினைகள் போன்றவற்றில் தொடர்புடைய துறைகளில் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்துவோம் என்று சகல தரப்பினராலும் தெரிவிக்கப்பட்டதாக சீன தூதரகத்தின் டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

