கந்தளாய் பிரதேசத்தில் மீனவர்கள் மீது தாக்குதல்

236 0

கந்தளாய் பிரதேச முஸ்லிம் மீனவர்கள், அப்பிரதேச பெரும்பான்மை மீனவர்களுக்கு எதிராக இன்று கந்தளாய் பிரதேச செயலாளர் காரியாலத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பிரதேச பெரும்பான்மை மீனவர்கள் கடந்த சில வருடங்களாக தமது மீன் பிடி தொழிலுக்குத் தடையாக இருந்து வருவதாகத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளோ அல்லது அரசாங்கமோ மீன் பிடிக்க எந்தவித தடை உத்தரவும் பிறப்பிக்காத பட்சத்தில் குறிப்பிட்ட ஒரு சில விசமிகள் மாத்திரமே இவ்வாரான ஈனச்செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், நேற்றைய தினம்  மீன் பிடிக்கச் சென்ற ஒருவரை அடித்து குளத்தில் வைத்துத் தாக்கிய சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளதாகவும் கந்தளாய் பிரதேச முஸ்லிம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் மீனவர்கள் மீது பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் கம்பு தடிகளால் அடித்து மற்றும் கற்களால் எரிந்து தாக்கியுள்ளார்கள். தாக்குதலுக்குள்ளான இரண்டு முஸ்லிம் மீனவர்கள் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் நிலைமையைச் சுமூக நிலைக்குக் கொண்டு வந்ததோடு, மூன்று மாதங்களுக்குத் தற்காலிகமாக மீன்பிடிக்க அனுமதியும் பெற்றுக் கொடுத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ இதற்கான சரியான தீர்வைப் பெற்றுக் கொடுக்காத பட்சத்தில் இவ்விடயம் இரண்டு இனங்களுக்கிடையிலான பிரச்சனையாக மாறலாமெனவும், இதற்கான சரியான தீர்வைப் பெற்றுக் கொடுக்க முன்வருமாறும் பிரதேச வாழ் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்