கரையினில் ஏங்கும் மனங்கள்-அகரப்பாவலன்.

449 0

கரையினில் ஏங்கும் மனங்கள்
—————————————————-

சொல்லிச் சென்ற வீரர்கள்
வரவில்லையென்று
கரையினிலே ஏங்கும் மனங்கள்…

வீரர்கள் ஆழ்ந்த
இருப்பிடம் தெரிந்து
கடலம்மா தன்
நெஞ்சினில் அடிக்கும்
அலைகளின் சத்தம்…

சாட்சியாய் விரிந்த
வானம் பொழியும் கண்ணீர்…

கோபத்தில் அனலை வீசி
கரையினில் வெப்பத்தை
வீசும் காற்று…

கடலின் அடியில்
தமிழர்களின் தடயம்
பதிந்துள்ளதாம் – நம்
வீரர்களின் அடையாளமும்
அங்குதான் வேரூன்றிவிட்டது…

கரையினில் புன்னகை பூத்து
குழந்தை மனசு போல்
வெடிச்சிரிப்பில் ஆழ்ந்து
சாவின் முடிவு தெரிந்தும்
உயிரையும், சாவையும் , தேசத்தையும்
ஒரு புள்ளியில் பார்த்து
விடை கூறிச் சென்ற வீரர்…

“ஈகம்” என்ற ஒற்றை வார்த்தைக்குள்
அடக்கிவிடமுடியாத தேசப்பிறவிகள்..
கடலினில் ஆழ்ந்த வீரம்
கடலின் காவலாய் காக்கும்.

-அகரப்பாவலன்-