ஒற்றையாட்சி தீர்வுக்காகவே முயற்சிக்கிறார் சம்பந்தன்! – கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கிருஷ்ணபிள்ளை

274 0

ஒற்றையாட்சி மூலம் தீர்வு பெறப்படுமென, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்து வரும் கருத்தைப் பலர் விமர்சிப்பது தற்காலத்துக்குப் பொருத்தமற்றது. மாறாகத் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ப சம்பந்தன் ஐயாவுக்குப் பொருத்தமான கருத்துக்களையும் நடவடிக்கைகளையும்தான் மேற்கொண்டு வருகின்றார் என, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமலை) தெரிவித்தார்.

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியிலுள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பெற்றுத்தராத ஈழத்தை, யாராலும் பெற்றுத்தர முடியாது. சம்பந்தன் , வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் போன்றோராலும் பெற்றுத்தர முடியாது என்பதை ஆணித்தரமாகத் தெரிவிக்கின்றேன். ஈழம், ஈழம் என்று இருக்கின்ற அனைத்தையும் இழந்துவிட்ட நிலையில், இருக்கின்ற மக்களையும் இழக்கின்ற சூழலை உருவாக்கக்கூடாது. இவ்வாறான நிலமைகளை நன்கு அறிந்த சம்பந்தன், ஒற்றையாட்சியின் கீழ் தீர்வுக்காக முயற்சிக்கின்றார் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

“நல்லாட்சி அரசாங்கம், கேப்பாப்பிலவு மக்களின் போராட்டத்தை இதுவரையில் கண்கொண்டு பாராமலிப்பது வேதனையளிக்கின்றது. இது தமிழ் மக்கள் என்பதற்காகவா?, அரசாங்கம் இதனைக் கவனிக்காமலிருக்கின்றது எனக் கேட்க விரும்புகின்றேன். “இந்நாட்டிலுள்ள ஏனைய மக்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகத்தான் அன்றிலிருந்து த.தே.கூவினர் செயற்பட்டு வருகின்றோம். நாங்கள் பிரிவினவாதத்தை விரும்பவில்லை. அவ்வாறு நினைத்திருந்தால் அன்றிலிருந்து சேர். பொன் இராமநாதன் மற்றும் சேர். பொன்.அருணாச்சலம்போன்றோர் இந்நாட்டைக் கூறுபோட்டிருப்பார்கள். “த.தே.கூ, சந்தர்ப்பவாத அரசியல் செய்யவில்லை. நாங்கள் கேட்பது தமிழினத்தின் உரிமையைத்ததான்” என்றார்.