வரி மேல் வரி விதிப்பை மக்களால் எவ்வாறு தாங்கிக்கொள்ள முடியும்

224 0

ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத்  திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பதிலில்லை, வரி மேல் வரி விதிப்பை மக்களால் எவ்வாறு தாங்கிக் கொள்ள முடியும்.

மக்களுக்காக அரசாங்கம் என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (நவ. 14)  ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் எவ்வித பதிலுமில்லை.

பாதிக்கப்பட்டுள்ள மக்களை அரசாங்கம் முழுமையாக புறக்கணித்துள்ளது,நடுத்தர மக்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

 

ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவுத்  திட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் உள்வாங்கப்படவில்லை.

பாரம்பரியமான வரவு செலவுத் திட்டத்திற்கு அப்பாற்பட்ட வகையில் வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளோம் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார். நாட்டு மக்களின் நலனுக்காகவே அரசாங்கம் செயற்பட வேண்டும் என்பதை அவர் விளங்கிக் கொள்ளவில்லை.

வரிக்கு மேல் வரி விதிப்பு இதனை மக்களால் எவ்வாறு தாங்கிக் கொள்ள முடியும். நிவாரணத்தை தவிர்த்து நாட்டு மக்கள் சுயமாக முன்னேற்றமடையும் யோசனைகள் குறிப்பிடப்படவில்லை.சிறு மற்றும் நடுத்தர முயற்சியாளர்களை பாதிப்பிற்குள்ளாக்கி பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என்றார்.