பிரியங்காவை சிறையில் சந்தித்தவேளை – மனம் திறந்தார் நளினி

56 0

பிரியங்கா காந்தி தன்னை சிறையில் சந்தித்தவேளை தனது தந்தை ராஜீவ்காந்தியின் படுகொலை குறித்து கேள்விகளை எழுப்பினார் என நளினி ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

விடுதலையான பின்னர் நடத்திய முதலாவது செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

 

எனக்கு தெரிந்த அனைத்தையும் பிரியங்காவிடம் தெரிவித்தேன் என தெரிவித்துள்ள நளினி பிரியங்கா உறுதியானவராக காணப்பட்டாரா அல்லது உணர்ச்சி வசப்பட்டவராக காணப்பட்டாரா என்ற கேள்விக்கு பிரியங்கா மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராக காணப்பட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டு பல வருடங்களிற்கு பின்னரே பிரியங்கா தன்னை சந்தித்த போதிலும் தனது தந்தையின் மரணத்தினால் ஏற்பட்ட காயங்கள் ஆறாத நிலையில் பிரியங்கா காணப்பட்டார் என நளினிதெரிவித்துள்ளார்.

பிரியங்கா அழுதாரா என்ற கேள்விக்கு ஆம் என நளினி குறிப்பிட்டுள்ளார்.

ராஜீவ்காந்தி 1991இல் கொலை செய்யப்பட்டார் 2008 இல் நளினியை  பிரியங்கா வேலூர் சிறைச்சாலையில் சந்தித்தார்.

இந்த சந்திப்பில் பேசப்பட்ட ஏனைய விடயங்கள் குறித்து எதனையும் தெரிவிக்க முடியாது ஏனென்றால் அவை  பிரியங்காவின் விருப்பத்துடன் தொடர்புபட்டவை எனவும் நளினி தெரிவித்துள்ளார்.

ராஜீவ்காந்தி  குடும்பத்தை சந்திப்பதில் ஏதாவது தயக்கம் உள்ளதா என்ற கேள்விக்கு அவர்கள்  விரும்பினால் நான் அவர்களை சந்திப்பேன் ஆனால் படுகொலை வழக்கு காரணமாக தயக்கம் கொண்டிருந்தேன் எனவும் நளினி தெரிவித்துள்ளார்.

 

30 வருடங்கள் சிறையில் கற்றுக்கொண்ட பாடம் குறித்த கேள்விக்கு சிறைச்சாலை என்பது மிகப்பெரிய பல்கலைகழகம் அங்கு நான் பல விடயங்களை கற்றுக்கொண்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் சிறைவாழ்க்கை குறித்தும் நீதிக்கான போராட்டம் குறித்தும் நூல் ஒன்றை எழுதும் எண்ணமுள்ளதா என்ற கேள்விக்கு நான் தற்போது எனது கணவர் மகளுடன் இணைந்து வாழ்வது குறித்தே கவனம் செலுத்துகின்றேன் என நளினி தெரிவித்துள்ளார்.