கிழக்கு ஆளுனர் மற்றும் வியட்நாம் தூதுவருக்கிடையில் சந்திப்பு

45 0

கிழக்கு மாகாணத்தின் வர்த்தகர்கள் மற்றும் வியட்நாம் இலங்கைத் தூதுவர் ஹோ தி தான் ட்ரூக் மற்றும் மாகாண ஆளுநர் அனுராதா யம்பத் ஆகியோர் தலைமையில் வியட்நாம்-இலங்கை வர்த்தக உச்சி மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் பாசிக்குடா அமயா பீச் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தில் வியட்நாம் வர்த்தகர்களுக்கு புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.

மேலும், கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூர் வர்த்தகர்கள் வியட்நாமில் செய்யக்கூடிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் பேசப்பட்டது.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருட்களை வியட்நாமுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் வியட்நாமிய முதலீட்டாளர்களுக்கு இயன்றளவு வசதிகளை வழங்குவதாக ஆளுநர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பிற்கு முன்னதாக, அதே ஹோட்டல் வளாகத்தில் ஆளுநருக்கும் வியட்நாம் தூதுவருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்றும் இடம்பெற்றதுடன், இரு நாடுகளின் சுற்றுலா, பொருளாதார மற்றும் கலாசார விடயங்கள் பலவும் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க, காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்வர், கிழக்கு மாகாண வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் ஹரி பிரதாப் ஆகியோர் கலந்துகொண்டனர்.