பட்டப்பகலில் வீடுகளை உடைத்து கொள்ளை : இருவர் கைது – யாழில் சம்பவம்

50 0

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வீடுகளுக்குள் புகுந்து திருட்டுகளில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டின் கீழ் இளைஞர்கள் இருவர் வியாழக்கிழமை (நவ 10) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு அந்த சந்தேக நபர்களுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் மேலும் இருவரும் கைதாகியுள்ளனர்.

இந்த சந்தேக நபர்களிடமிருந்து 60 பவுண் நகைகள் மற்றும் ஒருதொகை பணம் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:

கடந்த ஒகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் காரைநகர், புங்குடுதீவு, ஊர்காவற்றுறை, வேலணை உள்ளிட்ட பிரதேசங்களில் பகல் வேளைகளின்போது வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சென்றிருக்கும் சந்தர்ப்பங்களில் வீடுகள் உடைபட்ட நிலையில் நகைகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டமை தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த முறைப்பாடுகள் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

அதன் அடிப்படையில், யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 22 வயதுடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அதன் பின்னர் அவர்களிடமிருந்து திருட்டு நகைகளை கொள்வனவு செய்த மேலும் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து தங்க நகைகளும் பணத்‍தொகையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதன்படி, வேலணை, அராலி வீதியில் உள்ள வீடொன்றில் 20 பவுண் நகைகள், வங்களாவடி பகுதியில் உள்ள வீ‍டொன்றில் 7 1/2 பவுண் நகைகள், சுருவில் பகுதியில் உள்ள வீடொன்றில் 13 பவுண் நகைகள், புங்குடுதீவு பகுதியில் உள்ள வீடொன்றில் 3 பவுண் நகைகள், முழங்காவில் மற்றும் காரைநகர் பகுதியில் உள்ள இரு வேறு வீடுகளில் 11 பவுண் நகைகளை திருடியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளின்போது சந்தேக நபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மேலும், சந்தேக நபர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும், நீண்ட காலமாக திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களுக்கு நீதிமன்றங்களினால் 16 பிடியாணை உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியும் தலைமை பொலிஸ் பரிசோதகருமான நிகால் பிரான்சிஸ் தலைமையிலான குழுவினரால் இந்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு, விசாரணையின் பின் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.