சனத் நிஷாந்தவுக்கு எதிராக தயாராகும் குற்றப் பத்திரிகை

241 0

நீதிமன்ற அவமதிப்பு விவகாரம் தொடர்பில் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிரான குற்றப் பகிர்வுப் பத்திரத்தை தயாரிக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக சட்ட மா அதிபர் வியாழக்கிழமை (10) மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவித்தார்.

சட்ட மா அதிபர் சார்பில் நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டவாதி ஹாஷினி ஓபாத்த இதனை நீதிமன்றுக்கு அறிவித்தார்.

புத்தளம் மாவட்ட, ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக,  நீதிமன்றை அவமதித்ததாக, அரசியலமைப்பு விதிவிதாங்களின் கீழ் சட்டத்தரணிகளான விஜித்த குமார மற்றும் பிரியலால் சிரிசேன  ஆகியோரும், நீதிபதிகளை உள்ளடக்கிய, இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கமும் 3 மனுக்களை மேன் முறையீட்டு மன்றில் தாக்கல் செய்துள்ளன.

மேன்முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன தலைமையிலான்  நீதிபதி ஆர். குருசிங்கவை உள்ளடக்கிய இருவர் கொண்ட  நீதிபதிகள் குழாம் முன்னிலையில் அம்மனுக்கள் விசாரணைக்கு வந்தன.

இதன்போது மூன்று மனுதாரர்கள் சார்பிலும்  ஜனாதிபதி சட்டத்தரணிகளான ரொமேஷ் டி சில்வா, உபுல் ஜயசூரிய, சாலிய பீரிஸ் ஆகியோர் ஆஜராகினர்.

சனத் நிஷாந்த மன்றில் ஆஜராகாத நிலையில், அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா மன்றில் பிரசன்னமானார்.

ஏற்கனவே விடுக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவும் மன்றில் பிரசன்னமாகியிருந்தார்.

இந் நிலையில், இராஜாங்க அமைச்சர் நீதிமன்றை அவமதிக்கும்  உரை அடங்கியதாக கூறப்படும் ஊடகவியலாளர் சந்திப்பு குறித்த முழுமையான செம்மைப்படுத்தப்படாத ஒளிப் பதிவுகளை மேன் முறையீட்டு நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன ஊடகப் பிரிவுக்கும் மேலும் 3 தொலைக்காட்சிகளுக்கும் உத்தரவிட்டது.

அதன்படி இந்த வழக்கு மேலதிக விசாரணைகளுக்காக எதிர்வரும் டிசம்பர்  12 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

கடந்த  மே மாதம் 9 ஆம் திகதி காலி முகத்திடல் போராட்டக்காரர்களை தாக்கியமைக்காக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்,  சனத் நிஷாந்த சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளதாகவும், அது குறித்த விசாரணைகள் இன்னமும் நிறைவடையாத நிலையில்   குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை  முன்னெடுப்பதாகவும் மனுதாரர்கள்  தமது மனுக்களில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

அவ்வாறான நிலையில் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் திகதி  அன்று,  ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன  கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய சனத் நிஷாந்த, இலங்கையின் நீதித்துறை குறித்து, குறிப்பாக நீதித்துறை  உத்தியோகத்தர்கள்  தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்ததாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தெரிவித்த குறித்த கருத்துக்கள் நீதிமன்றை அவமதிக்கும் வகையில்  உள்ளதாக  என மனுதாரர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், இந்த கருத்துக்கள் நீதித்துறைக்கும், நீதித்துறை உத்தியோகத்தர்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில்  அமைந்துள்ளதாகவும் மனுதாரர்கள்  குற்றம்சாட்டியுள்ளனர்.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர், இராஜாங்க அமைச்சர்  சனத் நிஷாந்தவின் கருத்துக்கள் நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் இருப்பதாக மனுதாரர்கள்  சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதனால் அரசியலமைப்பின் 105 (3) உறுப்புரையின்  கீழ் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக இராஜாங்க அமைச்சர்  சனத் நிஷாந்தவை தண்டிக்க உத்தரவிடுமாறு மனுதாரர்கள்  கோரியுள்ளனர்