பல்கலைக்கழக பகிடிவதை : விசாரணை செய்யும் பொறுப்பு சி.ஐ.டி.யிடம்

165 0

பல்கலைக் கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை சம்பவங்கள் குறித்து இனி மேல் சி.ஐ.டி.யினரே விசாரணைகளை முன்னெடுப்பர் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் அனைத்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ள நிலையில்,   இனி மேல் எந்தவொரு பொலிஸ் பிரிவிலும் பதிவாகும் பகிடிவதை தொடர்பிலும் சி.ஐ.டி.யினரேயே விசாரணைகளை முன்னெடுப்பர் என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அதன்படி களனி பல்கலைக் கழகத்தில் 2 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவனுக்கு, மாணவர் சங்கத்தின் உறுப்பினர்க்ள் மூவர் தாக்குதல் நடாத்தி பகிடிவதை செய்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து கிரிபத்கொடை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு, அதற்கு ஆலோசனை வழங்கியதாக கூறி வேறு 6 மாணவர்களை மற்றொரு குழு பல்கலைக் கழகத்தின் இடமொன்றில் தடுத்து வைத்து சித்திரவதை செய்ததாக களனி பொலிஸ்  நிலையத்துக்கு கிடைத்துள்ள முறைப்பாடு, பேராதனை பல்கலைக் கழக மாணவன் ஒருவனுக்கு சமூக வலைத் தளம் ஊடாக ஆபாச படங்களை  அனுப்பி பகிடிவதை செய்தமை ஆகிய சம்பவங்கள் குறித்த விசாரணைகள்  உடனடியாக சி.ஐ.டி.யிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

குற்றவியல் நடைமுறை சட்டக் கோவை விதிவிதாங்களுக்கு அமைய இவ்வாறு அவை பொலிஸ் மா அதிபரால் சி.ஐ.டி.யினருக்கு விசாரணைகளுக்காக கையளிக்கப்பட்டுள்ளன.