யாழ்ப்பாணத்தில் கடந்த 11 மாதங்களில் 2774 பேர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாகவும், 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் யாழ் மாவட்ட பிராந்திய சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவரது அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (நவ 5) ஊடகங்களை சந்தித்தபோது இத்தரவினை வெளிப்படுத்தி அவர் மேலும் கூறுகையில்,
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு நோய் அதிகரித்துச் செல்வதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
இந்த மாவட்டத்தில் இன்று நவம்பர் 4ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 2774 பேர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் இந்த வருடத்தில் 8 டெங்கு நோய் இறப்புக்கள் பதிவாகியுள்ளன.
இவ்வருட ஆரம்பத்தில் இருந்து மாத ரீதியாக பார்க்கிறபோது, ஜனவரி மாதத்தில் இருந்து படிப்படியாக டெங்கு பரவல் அதிகரித்து, மே, ஜூன் மாதமளவில் ஒரு அதிகரித்த பரம்பல் காணப்பட்டது.
பின்பு நோய்ப்பரவலில் குறைவான நிலை காணப்பட்டு, கடந்த ஒக்டோபர் மாதம் முதல் மீண்டும் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்துச் செல்வதை நாங்கள் அவதானிக்கக்கூடியதாக உள்ளது என்றார்.

