18 நாட்கள் ஹோட்டலில் தங்கியிருந்து விட்டு பணம் செலுத்தாது தப்பிச் சென்ற தேரர் கைது

80 0

கொழும்பில் உள்ள பிரபல  ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் 18 நாட்கள் தங்கியிருந்து அதற்குரிய  கட்டணமான  சுமார்  ஐந்து இலட்சம் ரூபாவைச் செலுத்தாமல் தப்பிச் சென்ற தேரர் ஒருவர் நேற்று (03) குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் மஹியங்கனை பிரதேசத்தில் வைத்து  கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேக நபர், கடந்த ஆகஸ்ட் 31ஆம் திகதி கொழும்பில் உள்ள நட்சத்திர  ஹோட்டல் ஒன்றுக்கு வந்து 18 நாட்கள் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹோட்டலில் தங்கியிருந்த போது திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதன்போது அவர் தனது ஹோட்டல் கட்டணத்தை செலுத்துவதாக ஹோட்டல் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த நபர் சிகிச்சையின் பின்னர் வைத்தியசாலையை விட்டு வெளியேறி மஹியங்கனையிலுள்ள தனது விஹாரைக்குச் சென்றுள்ளார். இது தொடர்பில் ஹோட்டல் நிர்வாகம் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.