இனங்களுக்கிடையிலான சமாதானம், சகவாழ்விற்கான தேவை மீக தீவிரமாக உணரப்பட்டுள்ளது

193 0

இனங்களுக்கிடையே சமாதானம், சகவாழ்வு மற்றும் ஐக்கியத்துடன் வாழ்வதற்கான தேவை வரலாற்றில் எக்காலத்திலும் இல்லாத வகையில் தற்காலத்தில் மிக தீவிரமாக உணரப்படுகிறது. அதற்கமைய நாட்டின் அனைத்து பகுதிகளிலுமுள்ள சிறுவர்கள் இன மத பேதமின்றி ஒன்றிணைந்து செயல்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

நேற்று புதன்கிழமை ரண்டம்பே தேசிய மாணவர் படையணி பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற 105 ஆவது ஹெர்மன்லூஸ், டி சொய்சா சவால் கிண்ணம் – 2022 தேசிய மாணவர் படையணி அணிவகுப்பில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பாதுகாப்புச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர்,

மாணவப் பருவத்தில் மாணவர் படையணி நடவடிக்கைகளில் ஈடுபடும் சிறுவர்கள் சிறந்த தலைமைப் பண்பு, ஒழுக்கம், கடமைகளைச் செய்வதில் விடாமுயற்சி, சவால்களை எதிர்கொள்ளும் திறன், மற்றும்  தன்னம்பிக்கையுடன் வாழ்வார்கள் என சமூகத்தில் பலமான நம்பிக்கை உள்ளது. இம்மாணவர் படையணிகளை காணும் போது அதன் உண்மை தெளிவாக புலப்படுகிறது.

உலக தொழில்வாய்ப்புத் துறையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு வரும் இக்காலகட்டத்தில், அதற்கேற்ப செயற்கை நுண்ணறிவு, தன்னியக்கமாக்கல், ரோபோட்டிக்ஸ் போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் எதிர்கால வேலைகளுக்காக அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. அதற்காக எமது பிள்ளைகள் தற்போதிருந்தே தயாராக வேண்டும்.

டிஜிட்டல் கல்வியறிவு, ஆங்கில மொழித்திறன் மற்றும் எந்தவொரு எதிர்கால சூழலுக்கும் முகங்கொடுப்பதற்கான திறன்களை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மாணவர் படையணி பயிற்சி அதற்கான திறன்களை மேம்படுத்தியுள்ளது. அத்துடன் பயிற்சியின் மூலம் பெறப்படும் திறன்களையும் அறிவையும் பயன்படுத்தி தேவையான பிற திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்ற வகையில் மாணவர் படையணியின் செயற்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றேன். அதற்கமைய  தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்.

நாட்டில் நிலையான சமாதானம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சமூகங்களுக்கிடையே சகவாழ்வை நிலைநாட்டுவதற்காக அரசாங்கம் மேற்கொண்ட வேலைத்திட்டத்திற்கு வலுவூட்ட வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களையும் உற்படுத்தி தேசிய மாணவர் படையணி மௌன சேவையை செய்து வருகின்றது என்றார்.