அரசியலமைப்பு திருத்தம் மக்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி

186 0

அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் மக்கள் போராட்டத்துக்கு கிடைத்த வேற்றியாகவே நாங்கள் காண்கின்றோம். மக்கள் மாற்றம் ஒன்றையே கோரி இருந்தனர். அந்த மாற்றத்துக்கான அடித்தளத்தை ஜனாதிபதி நிறைவேற்றி இருக்கின்றார்.

அத்துடன் பொருட்களின் விலை குறைப்புக்கு ஏற்றவகையில் சேவை கட்டணங்களிலும் குறைப்பு இடம்பெறவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி மேல்மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கித்சிறி மஞ்சநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் திங்கட்கிழமை (24)  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மக்கள் மாற்றம் ஒன்றை கோரியே போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அந்த மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க படிப்படியாக நடவடிக்கை எடுத்து வருகின்றார்.

ஏனெனில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் ஒரு ஆசனமே இருக்கின்றது. பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவுடனேயே அவர் ஜனாதிபதியாக தெரிவாகினார்.

அதனால் பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவுடனேயே அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது. அதனை தற்போது ஜனாதிபதி செய்து வருகின்றார்.

குறிப்பாக அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் கொண்டுவரும்போது ஆரம்பத்தில் அரசாங்கத்துக்குள் அதற்கு கடும் எதிர்ப்பு இருந்தது. பின்னர் அந்த எதிர்ப்புகளை எல்லாம் ரணில் விக்ரமசிங்க மிகவும் நிதானமான முறையில் வெற்றிகொண்டார்.

அதன் பிரகாரம் பொதுஜன பெரமுன கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுடன் கடந்த வெள்ளிக்கிழமை 22 ஆம் திருத்தம் பாராளுமன்றத்தில் அனுமதித்துக்கொள்ளப்பட்டது. இது மக்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகவே நாங்கள் காண்கின்றோம்.

ஏனெனில் நாட்டில் மாற்றத்தையே மக்கள் கோரி இருந்தனர். அதற்கான அடித்தளமாகவே 22 ஆம் திருத்தம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. நாடு பொருளாதார ரீதியில் வங்குரோத்து அடைய 20 ஆம் திருத்தத்தில் ஜனாதிபதி்கு இருந்த   வரையறுக்கப்படாத அதிகாரமே காரணமாகும்.

அதேபோன்று இரட்டை பிரஜா உரிமை உள்ளவர்களின் பொருப்பற்ற நடவடிக்கை மற்றும் தேசிய ஆணைக்குழுக்களின் அதிகாரம் இல்லாமலாக்கப்பட்டிருந்தன.

22 ஆம் திருத்தம் ஊடாக ஜனாதிபதியின் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று இைட்டை பிரஜா உரிமை நீக்கப்பட்டுள்ளது. தேசிய ஆணைக்குழுக்கள் மீண்டும் ஸ்தாபிக்கப்படுகின்றது. இதன் மூலம் ஊழல் மோசடிகளை கட்டுப்படுத்த முடியும்.

மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரத்துக்கு வந்த பின்னர் மக்கள் எதிர்கொண்டுவந்த பல பிரச்சினைகளுக்கு குறிப்படத்த அளவில் தீர்வு காணப்பட்டு வந்திருக்கின்றது.

குறிப்பாக எரிபொருள் மற்றும் எரிவாயு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கின்றுது. அத்தியாவசிய பொருட்களின் விலை குறைவடைந்து வருகின்றது. பதுவருடாகும்போது அத்தியாவசிய பொருட்களின் விலை பாரியளவில் குறைவடையும்.

அத்துடன் எரிபொருள், எரிவாயு விலை குறைவடைந்துள்ள போதும் போக்குவரத்து மற்றும் சேவைக்கட்டணங்கள் இன்னும் குறைவடையவில்லை.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதும் உடனடியாக போக்குவரத்து கட்டகணங்களை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் இவர்கள், விலை குறைக்கப்பட்டால் அதன் நன்மையை மக்களுக்கு வழங்குதில்லை. அதனால் முச்சக்கர வண்டி மற்றும் பஸ் கட்டணங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றார்.